Published : 09 Jun 2020 02:25 PM
Last Updated : 09 Jun 2020 02:25 PM

மாநிலங்களவைத் தேர்தல்; தேவகவுடா வேட்புமனுத் தாக்கல்

முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று முறைப்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் கவுடா (காங்), பி.கே.ஹரி பிரசாத் (காங்),பிரபாகர் கோரெ (பாஜக), குபேந்திர ரெட்டி (மஜத) ஆகியோரின் பதவிக்காலம் வரும் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 4 இடங்களுக்கான தேர்தல் வரும்19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தற்போது கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அக்கட்சியை சேர்ந்த இருவரும், காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவரும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மஜத சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா போட்டியிட விரும்பினார். கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த அவர் மாநிலங்களவை எம்.பி.யாக விரும்பினார்.

தேவகவுடா இந்த தேர்தலில் வெல்வதற்கு 44 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவைப்படுகிறது. ஆனால் மஜதவுக்கு 34எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் ஆதரவைப் பெற மஜத முடிவெடுத்தது. காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதாகவே கூறப்படுகிறது இதனை உறுதிப்படுத்தும் விதமாக சோனியா காந்தியின் வேண்டுகோளின்படி தேவகவுடா மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தேவகவுடா இன்று முறைப்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.மனுத்தாக்கலின்போது அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா உள்ளிட்டோர் உடன் சென்றனர். காங்கிரஸ் ஆதரவு கிடைத்திருப்பதால் அவர் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x