

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஹார் மக்கள், பாஜக தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்றுமுன்தினம் உரையாடினார். அப்போது, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடுத்து தமது எல்லையை பத்திரமாக பாதுகாக்க தெரிந்த நாடு என உலக அளவில் இந்தியாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் அவர் பேசும்போது "காஷ்மீரின் உரி மற்றும் புல்வாமா பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதலும் வான்வழி தாக்குதலும் நடத்தப்பட்டது. அதனால் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை வலுவாக இருப்பதாகவும் தன் எல்லையை பாதுகாக்கத் தெரிந்த நாடு என்றும் உலக அளவில் பேசப்படுகிறது" என்றார்.
இந்நிலையில், அமித் ஷா பேச்சு தொடர்பான செய்தியை இணைத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டலடித்து நேற்று வெளியி ட்ட பதிவில் "எல்லையில் நிலவும் உண்மையான நிலவரம் என்னவென்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அனைவரின் இதயத்தையும் மகிழ்ச்சிப் படுத்த இந்த சிந்தனை நல்ல யோசனையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
லடாக் பகுதி எல்லையில் நிகழ்ந்த மோதலால் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எல்லைப் பகுதியில் நிலவும் பதற்ற சூழலுக்கு அமைதியாக தீர்வு காண்பது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.