கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கவுன்சிலர் கைது: ஊர்வலமாக சென்றதால் நடவடிக்கை

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கவுன்சிலர் கைது: ஊர்வலமாக சென்றதால் நடவடிக்கை
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாதராயணபுரா வார்டு கவுன்சிலர் மஜதவை சேர்ந்த இம்ரான் பாஷா. இவருக்கு கடந்த மாத இறுதியில் கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜெ.ஜெ.நகர் அரசு மருத்துவமனையில் 2 வாரங்களாக சிகிச்சைப்பெற்று வந்தார். கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததும் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆம்புலன்சில் செல்லாமல் இம்ரான் பாஷா, தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புடைசூழ, திறந்த வேனில் ஊர்வலமாக வீட்டுக்கு சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு மாலைகள்அணிவிக்கப்பட்டு, பட்டாசுகள்வெடிக்கப்பட்டன. தொண்டர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கியும், கட்டியணைத்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

கரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தை அறிந்தும், விதிமுறையை மீறிய கவுன்சிலர் இம்ரான் பாஷா மற்றும் அவரது தொண்டர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாயினர். இதையடுத்து, தொற்றுநோயை பரப்பும் விதமாக அலட்சியமாக செயல்பட்டதாக இம்ரான் பாஷா மீது ஜெ.ஜெ.நகர் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவரை கைது செய்து, பெங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஜூன் 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in