Published : 09 Jun 2020 06:27 AM
Last Updated : 09 Jun 2020 06:27 AM

லடாக் எல்லை பிரச்சினையில் இந்தியா, சீனா இடையே உடன்பாடு எட்டப்பட்டது- சீன வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வ தகவல்

புதுடெல்லி

லடாக் எல்லைப் பிரச்சினையில் இந்தியா, சீனா இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று சீன வெளி யுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர் கள் அத்துமீறி நுழைந்தனர். இதன் காரணமாக மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மே 9-ம் தேதி சீன ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லைக்குள் நுழைய முயன்றபோது இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.

ராணுவ பேச்சுவார்த்தை

இந்த விவகாரம் தொடர்பாக இந் தியா, சீனா இடையே காணொலி காட்சி மூலம் 12 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின்னும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் உடனடியாக வெளி யேற வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணித்து அமைதி வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவும் இந்தியாவும் சம்மதித்துள்ளன. தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

சீன அரசு கருத்து

இந்நிலையில், லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன வெளி யுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் ஹுவா சூன்யிங், பெய்ஜிங்கில் நேற்று கூறியதாவது:

சீனா, இந்தியா இடையிலான எல்லை பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்படும். தற் போது எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. கடந்த 6-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன் பாடு எட்டப்பட்டுள்ளது. இரு நாடு களின் தலைவர்கள் ஏற்கெனவே ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் முறைப் படி அமல்படுத்தப்படும். எல்லை யில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பதற்றம் தணியும்

சீன வெளியுறவுத் துறை வட் டாரங்கள் கூறும்போது, ‘‘கடந்த அக்டோபரில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சென்னையில் சந்தித்துப் பேசினர். அப்போது கருத்து வேறு பாடுகள் பிரச்சினைகளாக மாற இரு நாடுகளும் அனுமதிக்கக் கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக் கப்பட்டது. அதன் அடிப்படையில் எல்லைப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்’’ என்று தெரிவித்தன.

சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில், ‘சீனா, இந்தியா இடையிலான ராணுவ கமாண்டர்களின் பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு எட்டப் பட்டது. இதன்காரணமாக டோக் லாம் போன்ற பதற்ற சூழ்நிலை உருவாவது தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் சில குழப்பங்களால் இன் னும் சிறிது காலம் லடாக் எல்லை யில் ராணுவ ரீதியிலான பதற்றம் நீடிக்கலாம். அதன்பிறகு பதற்றம் தணியும்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சீன வெளியுறவுத் துறை மற்றும் அந்த நாட்டு அரசு ஊடகம் தெரி வித்திருக்கும் கருத்துகளின் அடிப் படையில், லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் படிப்படி யாக வாபஸ் பெறப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x