Published : 08 Jun 2020 04:51 PM
Last Updated : 08 Jun 2020 04:51 PM

ஹாட்ஸ்பாட் தாராவியில் குறையும் கரோனா தொற்று; 7 நாட்களில் மரணம் இல்லை

மும்பையின் தாராவியில் மக்கள் நெருக்கடி குறைந்துள்ளது. கரோனா பாதிப்பும் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 7 நாட்களில் தராவியில் ஒருவர் கூட கரோனாவால் உயிரிழக்க வில்லை.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியும், உலகிலேயே மக்கள் அடர்த்தி மிக அதிக அளவில் உள்ள இடமுமான தாராவி. இந்தப் பகுதியிலிருந்து கரோனா பரவத் தொடங்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இங்கு பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தற்காலிகமாக மருத்துவமனை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3.6 லட்சம் மக்கள் வசிக்கும் இடம் இது. ஒடுங்கலான சந்துகள், தீப்பெட்டி போல ஒட்டி அடுக்கிய அறைகளில் வாழும் மக்கள் இருக்கும் இந்தப் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் நெருக்கடி சூழ்ந்த இடமாக மாறியுள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்க அத்தியாவசியத் தேவையான சமூக இடைவெளி என்பது இங்கே சாத்தியமேயில்லாத நிலை.

இந்தநிலையில் தாராவியில் இருந்து மக்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. மொத்தம் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல விண்ணப்பித்திருந்தனர். அதில், 6.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமாகவும், 2 லட்சம் பேர் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிவிட்டனர்.

இவ்வாறு வெளியேறியவர்களில் மும்பைக்குத் தற்காலிகமாகச் சென்றிருந்த தமிழர்களும், அங்கேயே நிரந்தரமாக வசிக்கும் தமிழர்களும் கணிசமான எண்ணிக்கையில் வெளியேறினர்.

தாராவியில் வசிக்கும் 8 லட்சம் பேரில் அதிகமானவர்கள் வெளியேறி விட்டதால் அங்கு கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழர்களிலும் ஒரு பகுதியினர் ரயில் மற்றும் பிற வாகனங்கள் வாயிலாக தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். இதனால் தாராவியில் மக்கள் நெருக்கடி குறைந்துள்ளது. கரோனா பாதிப்பும் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 7 நாட்களில் தராவியில் ஒருவர் கூட கரோனாவால் உயிரிழக்க வில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஜூன் 1-ம் தேதி தராவியில் 31 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அதன் பிறகு எண்ணிக்கை குறைந்து வருிறது. ஜூன் 4-ம் தேதி 23 பேரும், ஜூன் 6-ம் தேதி 17 பேருக்கும், ஜூன் 7-ம் தேதி 13 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1912 பேர் கரோனா நோயாளிகள் உள்ளனர். அதேசமயம் மே 30ம்- தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஒருவர் கூட கரோனாவால் தாராவியில் உயிரிழக்கவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x