Last Updated : 07 Jun, 2020 07:26 PM

 

Published : 07 Jun 2020 07:26 PM
Last Updated : 07 Jun 2020 07:26 PM

பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையி்ல் ஆட்சியைப் பிடிக்கும்: அமித் ஷா நம்பிக்கை

டெல்லியில் காணொலி மூலம் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

பிஹார் மாநிலத்தில் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்

பிஹார் மக்கள் மத்தியிலும், பாஜக தொண்டர்கள் மத்தியிலும் பிஹார் ஜன் சமாவத் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று டெல்லியில் இருந்த வாறு காணொலி மூலம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையில் ஆட்சி நடந்த போது நாகரீகமில்லாத காட்டு தர்பார் நடந்து கொண்டிருந்தது. மாநிலத்தின்வ வளர்ச்சி 3.9 சதீவீதமாக வீழ்ச்சி அடைந்தது. ஆனால், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின், மாநிலத்தின் வளர்்ச்சி 11.3 சதவீதமாக உயர்ந்தது.

மாநிலம் லாந்தர் விளக்கில்(ஆர்ஜேடி சின்னம்) இருந்து எல்இடி விளக்கு இருக்கு நிலைக்கு மாறியது. நான் பேசும் இந்த நிகழ்ச்சிக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த நிகழ்ச்சி மூலம் கரோனா காலத்தில் மக்களுடன் தொடர்பில் இருக்கவே நடத்தப்படுகிறது. மத்திய அரசின் தற்சார்பு பொருளாதாரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கமே இந்த பிரச்சாரமாகும். இதுபோன்று 75 கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வர் சுஷில்குமார் மோடியும் மக்களுக்காக ஏராளமான பணிகள் செய்தும் அவர்களுக்கு அதில் விளம்பரத்தும் எண்ணமில்லை. ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில்தான் மாநிலத்தில் காட்டு தர்பார் ஆட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி வந்தது.

நாங்கள் நடத்தும் இந்த கூட்டத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் தடுக்க முயன்றால் அவர்கள் டெல்லிக்கு வந்து ஓய்வெடுக்கலாம். கரோனா வைரஸுக்கு எதிராக பிரதமர் மோடி செய்த பணிகளை எதிர்க்கட்சிகள் உதாசினப்படுத்துகிறார்கள். ஆனால், மக்கள் அதை உணர்ந்து அவருக்கு துணையாக இருக்கிறார்கள், அவரின் அறிவுரைகளைக் கேட்கிறார்கள்.

நாட்டில் லாக்டவுனால் தவித்த 1.25 கோடி புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்து, தேவைகளை நிறைவு செய்து சொந்த மாநிலத்துக்கு பாதுகாப்பாக மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் தீர்க்கப்படாமல் இருந்த பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறையாக வந்த அரசு முதலாம்ஆண்டில் தீர்த்துள்ளது. குறிப்பாக 370 சட்டப்பிரிவு, முத்தலாக் சட்டம் ரத்து செய்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசியல் செய்கிறர்கள்.

பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. அந்த தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ேதசிய ஜனநாயக்கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். ஆனால், இந்த நேரம் அரசியல் பேசுவதற்கு உகந்த நேரம் அல்ல. அனைவரும் கரோனா வைரஸுக்கு எதிராக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் போராடுவோம்

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x