Last Updated : 07 Jun, 2020 06:25 PM

 

Published : 07 Jun 2020 06:25 PM
Last Updated : 07 Jun 2020 06:25 PM

குடும்பங்களில் ஹீரோக்களாக இருந்த புலம்பெயர் தொழிலாளர்களை ஒரே இரவில் ஜீரோவாக்கியுள்ளது மோடி அரசு: சிடிஎஸ் தொழிலாளர்கள் ஆய்வு நிபுணர் இருதய ராஜன்  

கரோனா வைரஸ் லாக்டவுனால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கையில் காசில்லாமல் ஓட்டாண்டியாகியுள்ளனர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு ரூ.25,000 தொகை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று புலம்பெயர் தொழிலாளர் விவகார நிபுணர் இருதய ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இருதய ராஜன் என்ற இவர் திருவனந்தபுரத்தில் உள்ள வளர்ச்சி ஆய்வுகள் மையத்தில், மக்கள் தொகை ஆய்வு பிரிவில் பேராசிரியராக இருக்கிறார். இவருக்கு 35 ஆண்டுகால ஆய்வு அனுபவம் உள்ளது, இவரது ஆய்வுகள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாகக் கொண்டதுதான்.

அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

திட்டமிடப்படாத தேசம் முழுதுமான லாக்டவுன் லட்சக்கணக்கில் புலம் பெயர் தொழிலாளர்களை கையில் ஒரு பைசா இல்லாமல் ஓட்டாண்டியாக்கியுள்ளது.

நாட்டில் 60 கோடிக்கும் மேல் புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். அதில் 14 கோடி பேர் பெரிய நகரங்களில் மட்டும் உள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்க்ள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், “முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது நம்மிடையே 500 கரோனா தொற்றுக்களே இருந்தன, லாக் டவுனை தளர்த்தும் போது நம்மிடையே இன்று 2.5 லட்சம் கேஸ்கள் உள்ளன. தளர்த்தும் போது நாம் உலகில் 5வது பெரிய கரோனா நாடாகி விட்டோம்.

புலம்பெயர் தொழிலாளர்களை நீண்ட காலம், மிக அதிகமாக பாதிக்கசெய்து விட்டு நிவாரணம் என்ற பெயரில் ஒன்றுமே அரசு அளிக்கவில்லை.

ஒரு குடும்பம் எப்படி 5 கிலோ உணவுப்பொருளை மட்டும் வைத்துக் கொண்டு வாழமுடியும்? பெரிய பெரிய அறிவிப்புகள் எதுவும் இந்த ஏழைமக்களுக்கானதல்ல, ஆனால் இவர்களால்தான் இன்று நாம் கொண்டாடும் நகரங்கள் வளர்ந்துள்ளன.

இத்தனையாண்டுகளாக தங்கள் குடும்பங்களில் ஹீரோக்களாக இருந்த புலம்பெயர் தொழிலாளர்களை மோடி அரசு ஜீரோவாக்கியுள்ளது அவ்வளவே. ஒரே இரவில் குடும்பத்தின் வாழ்வாதார தாங்கிகள் சுமையாக மாறிவிட்டனர். ஏனெனில் வீட்டுக்கு வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிலும் தொற்றுடன் சிலர் திரும்பியதுதான் மிச்சம்.

இவர்களது இந்த நிலைக்கான தீர்வு நேரடியாக இவர்களிடம் ரொக்கமாக ரூ.25,000 அளிக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூடுதல் ஒதுக்கீடு இவர்களுக்கு பயனளிக்கவில்லை.

இப்படிச் செய்வது ஜிடிபியில் 1.5% செலவுதான், அல்லது 3.5 லட்சம் கோடியாகும். அவர்களது துயரத்தை துடைக்க இதைச் செய்தால் ஒன்றும் ஆகிவிடாது, ஏனெனில் இவர்கள்தான் நம் பொருளாதாரத்துக்கு பெரிய பங்களிப்பாளர்கள்

14 கோடி தொழிலாளர்களுக்கு தலா ரூ.25,000 அளிப்பதன் மூலம் தேவையை உருவாக்குவதன் வாயிலாக பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க முடியும்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்தான் அவர்களுக்கு ஓரளவுக்காவது உதவி புரிந்து வருகின்றன. இந்தத் தொகை அவர்களுக்கு அளிக்கப்பட்டாலும் அவர்கள் மீண்டும் வேலை தேடிக்கொண்டால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். பொருளாதாரம் முடங்கியுள்ள போது இதுவும் கடினமாக இருக்கும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்யேக வாடகை வீட்டுத் திட்டம் இன்னும் காலம் பிடிக்கும். இந்நிலையில் அவர்கள் எப்படி கருணையற்ற முதலாளிகளிடம் மீண்டும் வேலைக்குச் சேர நகரங்களுக்கு வருவார்கள் என்பது தெரியவில்லை.

ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டமும் மாநிலங்களின் தேர்வுக்கு விடப்பட்டதால் அது அமல்படுத்தப்பட்டாலும் நீண்டகால பயனளிக்குமே தவிர உடனடி பயனிருக்காது.

இன்னும் என்ன? அவர்கள் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக பெரும் சுமை என்ற கெட்ட பெயரையும், மரண வைரஸை சுமந்து வந்தவர்களாகவும் அவப்பெயரை அவர்கள் பெற்றுள்ளனர்.

கிராமங்களுக்கு திரும்பிய இவர்கள் கடும் மனச்சோர்வில் உள்ளனர், ஏற்கெனவே தற்கொலைகள் அதிகமாகி வருகின்றன. பல ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலை இப்பொது புலம்பெயர்வோர் தற்கொலைகள், வறுமையையும் பட்டினியையும் அவர்கள் எதிர்த்துப் போராட விரும்பவில்லை.

என்னுடைய கணிப்பு என்னவெனில் இப்போது ஊர் திரும்பியவர்களில் 30% பேர் மீண்டும் நகரத்துக்குத் திரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறென். ஏனெனில் இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் மீள்வதே கடினம். நெருக்கடியில் இவர்களுக்கு உதவிய முதலாளிகளுக்கு மட்டும் இவர்கள் திரும்ப உழைக்கக் கிடைப்பார்கள்.

ஆனால் பல முதலாளிகள் இவர்களை நெருக்கடி காலக்கட்டத்தில் கைவிட்டு விட்டனர். லாக்டவுன் காலத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிவெடுத்து தன் தொழிலாளர்களைக் காப்பாற்றும் பொறுப்பை உதறினர்.

இவ்வாறு கூறினார் இருதயராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x