Last Updated : 07 Jun, 2020 06:27 PM

 

Published : 07 Jun 2020 06:27 PM
Last Updated : 07 Jun 2020 06:27 PM

கரோனா பாதிப்பு: சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் இதுவரை ரூ8,320 கோடி கடன் வழங்கல்: நிர்மலா சீதாராமன் தகவல்

கரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட சிறு, குறு,நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அவசர கடன் உறுதித்தி்ட்டத்தின் கீழ் இதுவரை பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ 8 ஆயிரத்து 320 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

கரோனா வைரஸ் லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டங்கள் குறித்து கடந்த மாதம் நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதில் முக்கியமாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக பிணையில்லாத ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, கடந்த 1-ம் தேதி முதல் பொதுத்துறை வங்கிகள் அவசர கடன் உறுதித்தி்ட்டத்தின் கீழ் ரூ17ஆயிரத்து705.64 கோடி கடன் வழங்க அனுமதித்துள்ளன.

இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ ஜூன் 2-ம் தேதிவரை பொதுத்துறை வங்கிள் மூலம் ரூ17ஆயிரத்து705.64 கோடி கடன் அவசர கடன் உறுதித்தி்ட்டத்தின் கீழ் வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதில் ரூ.8,320.24 கோடி கடன் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி ரூ. 11,701 கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கி, அதில் ரூ.6,084 கோடி கடன் கடந்த 5-ம் தேதிவரை வழங்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.1,295.59 கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டு அதில் ரூ. 242 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ3 லட்சம் கோடி பிணையில்லாத கடன் 9.25 சதவீத வட்டியில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த நிறுவனங்கள் முத்ரா திட்டத்தின் மூலம் கடன்பெறலாம் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x