Last Updated : 07 Jun, 2020 10:03 AM

 

Published : 07 Jun 2020 10:03 AM
Last Updated : 07 Jun 2020 10:03 AM

பேருந்துகளில் 50 சதவிகித மாணவர்கள் மட்டும் பயணம்: பள்ளிகள் திறப்பிற்கு பொது விதிமுறைகளை வெளியிடவிருக்கும் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்காக நாடு முழுவதிலும் பள்ளிகள் மீண்டும் திறக்க மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை பொது விதிமுறைகள் வெளியிட உள்ளது. பேருந்துகளில் 50 சதவிகித மாணவர்கள் மட்டும் பயணிப்பது உள்ளிட்ட ஆலோசனையை அந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் உள்ளிட்ட கல்விநிலையங்கள் மூடப்பட்டன. தற்போது கரோனாவை சமாளித்தபடி பழைய நிலைக்கு நாடு திரும்பவேண்டிய நெருக்கடி உருவாகி வருகிறது.

இதனால், கல்வி நிலையங்களும் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளுக்காக மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை சார்பில் ஒரு பொது விதிமுறைகள் வெளியாக உள்ளன.

குறிப்பாக கல்வியின் செயல்பாடுகள் அனைத்திலும் சமூகவிலகல் கடைப்பிடிப்பது அவசியம் என வலியுறுத்தப்பட உள்ளது. இதற்கானப் பேருந்துகளின் 50 முதல் 55 இருக்கைகளில் பாதி எண்ணிக்கையில் மட்டும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

கார், வேன் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலும் இதேபோல் பாதி இருக்கைகளில் மட்டும் மாணவர்கள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். இவற்றில் மாணவர்கள் ஏறுவதற்கு முன்பாகவும், பின்பாகவும் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து சுத்தம் செய்யவும் வேண்டி இருக்கும்.

கல்வி நிலையங்களில் இந்த வாகனங்களுக்காகத் தனி நுழைவு வாயில் அமைக்கப்படவும் அறிவுறுத்தப்பட உள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்கள் முடிந்தவுடன் சமூக விலகலுடன் வெளியேறும் வகையில் செயல்முறை அமைக்கப்படும்.

வகுப்பறைகளின் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது இரண்டு பகுதிகளாக அவற்றை பிரித்து பாடம் நடத்தவும் உத்தரவிடும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், பல்வேறு வெளிநாடுகளில் கரோனா அச்சுறுத்தல் அடங்கிய பின் திறந்த பள்ளிகள் அடுத்த சில நாட்களில் மூடவேண்டிய நிலைக்கு உள்ளானது.

இதில் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் குழந்தைகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதும் காரணமானது. எனவே, கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதில் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை மிகுந்த கவனம் செலுத்த தன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘பெரும்பாலான கல்வி நிலையங்களில் பேருந்து பயணம் வேண்டாம் என பெற்றோர்கள் மறுத்து விட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும், சிறிய வாகனங்களில் அனுப்பப்படும் போதும் சமூகவிலகல் அவசியம் என நிபந்தனை விதிக்க உள்ளோம். உள்ளே நுழைந்தது முதல் வெளியேறுவது வரை அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்வது கல்வி நிலையங்களின் பொறுப்பாக இருக்கும்.’ எனத் தெரிவித்தனர்.

இதில், எந்தவிதமான சலூகைகளும் அளிக்கப்படக் கூடாது என கல்வி நிலையங்களுக்கு மத்திய அரசு நிபந்தனை விதிக்க உள்ளது. இந்த பொதுவிதிமுறைகள் அமைக்கப்பட்ட பின் அனைத்து கல்வி நிலையங்களும் ஒரேசமயத்தில் திறக்க அனுமதிக்கப்படாது.

மாறாக, ஒன்றன் பின் ஒன்று என பல கட்டங்களாக திறந்து அதன் செயல்பாடுகளை அறியப்படும். இதன் பின்னரே மற்ற கல்வி நிலையங்கள் திறப்பது பற்றியும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x