Published : 07 Jun 2020 07:33 AM
Last Updated : 07 Jun 2020 07:33 AM
கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் கவுடா (காங்), பி.கே.ஹரி பிரசாத் (காங்),பிரபாகர் கோரெ (பாஜக), குபேந்திர ரெட்டி (மஜத) ஆகியோரின் பதவிக்காலம் வரும் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 4 இடங்களுக்கான தேர்தல் வரும்19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தற்போது கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அக்கட்சியை சேர்ந்த இருவரும், காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவரும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மஜத சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா களமிறங்க வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் ஒருமனதாக அறிவித்துள்ளனர். இதனால் அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தேவகவுடா இந்த தேர்தலில் வெல்வதற்கு 44 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவைப்படுகிறது. ஆனால் மஜதவுக்கு 34எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் ஆதரவைப் பெறமஜத முடிவெடுத்துள்ளது. தற்போது காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருக்கும் டி.கே.சிவகுமாருக்கும் தேவகவுடா குடும்பத்துக்கும் நல்ல உறவு உள்ளது.எனவே அவர் மூலம் எளிதாக காங்கிரஸ் ஆதரவை பெற வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி மற்றும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை வேட்பாளர்களாக களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT