Published : 06 Jun 2020 09:33 PM
Last Updated : 06 Jun 2020 09:33 PM

கேரளாவில் இன்று 108 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் இன்று 108 பேருக்கு கரோனா தொற்று என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

''கேரளாவில் இன்று 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 16 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 12 பேர் மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், 11 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 10 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 9 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், தலா 4 பேர் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா 3 பேர் எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும், 2 பேர் கோட்டயம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 34 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 10 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த ஹம்ஸா கோயா (61) என்பவர் கரோனா பாதித்து மரணமடைந்துள்ளார். இன்று 50 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். இவர்களில் 30 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 7 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 6 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 5 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா ஒருவர் காசர்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இதுவரை நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக 1,83,097 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,81,482 பேர் வீடுகளிலும், 1,615 மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 284 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,903 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 81,517 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 77,517 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 20,769 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 19,597 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதுவரை 5,510 மறுபரிசோதனை உட்பட மொத்தம் 1,07,796 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்று புதிதாக 10 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் தற்போது நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x