Last Updated : 06 Jun, 2020 08:45 AM

 

Published : 06 Jun 2020 08:45 AM
Last Updated : 06 Jun 2020 08:45 AM

லாக்டவுன் தோல்வி; கரோனாவை சமாளிக்கும் திட்டம் பற்றி மக்களிடம் கூறுங்கள்: வரைபடம் வெளியிட்டு மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி


உலகில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின், இத்தாலி நாடுகளின் பாதிப்பு வரைபடத்தை வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட லாக்டவுன் முறை தோல்வி அடைந்துவிட்டது என்று மத்திய அரசைக் குற்றம்சாட்டியுள்ளார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்பு பதிவிட்ட கருத்தில் “ லாக்டவுனை மத்திய அரசு தவறாக செயல்படுத்துகிறது. கரோனா நோயாளிகள் அதிகரிக்கும் போது லாக்டவுனை தளர்த்துகிறது. கரோனா நோயாளிகள் அதிகரிக்கும் போது லாக்டவுனை தளர்த்துவது இந்திய அரசாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர், ஒட்டுமொத்தமாக 2.28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது லாக்டவுன் மூலம் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் எவ்வாறு சமாளித்தன, லாக்டவுனை எவ்வாறு அமல்படுத்தின என்பது குறித்த வரைபடத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் இந்த 4 நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்த போது லாக்டவுன் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தினார்கள் என்பதையும், இந்தியாவில் லாக்டவுன் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நடைமுறையில் இருந்தும் கரோனா வைரஸ் பரவல் குறையவில்லை, லாக்டவுனை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அந்த வரைபடம் மூலம் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ தோல்வியடைந்த லாக்டவுன் இப்படித்தான் இருக்கும். கரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள், திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை பாஜக அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

நம்முடைய சுகாதார மருத்துவ கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இருக்கிறதா என்பதை மக்கள் அறி்ந்துகொள்ள அனுமதிகப்பட்டுவார்களா. அல்லது அவர்களின் கவனம் வேறு ஏதாவது திசை திருப்பப்படுமா.

லாக்டவுன் தொடங்கியதிலிருந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தங்களுக்கு அரசிடம் இருந்து நேரடியாக நிதித்தொகுப்பு தேவை என தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் குரல்கள், கேட்காத காதுகளில் சொல்லப்படுகின்றன. உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து எப்போது அரசு விழிக்கப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x