Published : 06 Jun 2020 06:51 AM
Last Updated : 06 Jun 2020 06:51 AM

கரோனா வைரஸ் பரவல் எதிரொலி- ஏடிஎம்.களை தொடாமலேயே பணம் எடுக்கும் புதிய ஏடிஎம்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இப்போது பொதுப் பயன்பாடுகளில் பலவித மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமாகி வருகிறது. அந்த வகையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வங்கிகளின் தானியங்கி பணப் பட்டுவாடா (ஏடிஎம்) மையங்களிலும் மிகக் குறைவான தொடுதல் செயல்பாடுகளைக் கொண்ட ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ வங்கிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ஏடிஎம் இயந்திரங்களைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இதற்காக புதிய மாடல் ஏடிஎம்களை உருவாக்கி உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரங்கள் வங்கிகளின் செயலி (ஆப்) மூலம் செயல்படுபவையாக உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது உள்ள ஏடிஎம்.கள் அனைத்துமே வங்கிகள் அளித்த கிரெடிக் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள காந்த அட்டைகளில் உள்ள சங்கேத எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை.

புதிதாக உருவாக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்கள், வங்கிகள் அளித்த செயலி அடிப்படையில் கியூஆர் கோட் மூலம் செயல்படுபவை. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் மூலம் எடுக்க வேண்டிய பணம் மற்றும் செலுத்த வேண்டிய பணத்தை பதிவு செய்து இயந்திரத்தில் காட்டினால் அது செயல்படும். இதனால் இயந்திரத்துக்கும் மனிதர்களுக்குமான தொடுதல் குறையும் என்ற அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் நிறுவனம் தற்போது 70 ஆயிரம் ஏடிஎம்களை நிர்வகிக்கிறது. தற்போது இந்நிறுவனம் வடிவமைத்துள்ள புதிய வகை ஏடிஎம் இயந்திரங்கள் 2 வங்கிகளில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 4 வங்கிகளுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய இயந்திர செயல்பாட்டுக்கு ஏற்ப வங்கிகளின் கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் மாற்றம் செய்ய வேண்டும்.

கியூ ஆர் அடிப்படையில் பணப் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை தேய்க்கும் போது அதை பதிவு செய்யும் ஆபத்து (ஸ்கிம்) உள்ளது. இதில் அத்தகைய பிரச்சினை கிடையாது என்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் படேல் தெரிவித்துள்ளார். வங்கிகள் செயல்படுத்தும் செயலிகளை அனைத்து வங்கிகளின் செயலிகளோடு ஒருங்கிணைப்பதும் அவசியம் என்றார்.

தற்போது பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள், தொட்டு செயல்படுத்த தேவையில்லாத, ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்தும் ஏடிஎம்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் நிறுவனம் தற்போது பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம்களில் புதிய வகை ஏடிஎம்களை நிறுவியுள்ளது. இத்தகைய வசதியை வங்கிகள் குறைந்தபட்ச செலவில் மேற்கொள்ள முடியும் என்று ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் தலைவர் ரவி கோயல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x