Last Updated : 05 Jun, 2020 05:26 PM

 

Published : 05 Jun 2020 05:26 PM
Last Updated : 05 Jun 2020 05:26 PM

உ.பி.யின் 13,000 கைப்பேசிகளுக்கு ஒரே ஐஎம்இஐ எண் இருப்பது கண்டுபிடிப்பு: தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்து சூழல்

உத்திரப்பிரதேசத்தில் 13,000 கைப்பேசிகளுக்கு ஒரே ஐஎம்இஐ குறியீடு எண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசப்பாதுகாப்பிற்கு ஆபத்து உருவாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.

கைப்பேசிகள் திருட்டு மற்றும் அதன் மூலம் நடைபெறும் குற்றங்களை கண்டுபிடிக்கவும் ஐஎம்இஐ எனும் 15 இலக்கக் குறியீடு எண் அளிக்கப்பட்டு வருகிறது. கைப்பேசிகளின் சர்வதேச அளவிலான அடையாளக் குறியீடான இது ஒரு கைப்பேசிக்கு இருக்கும் எண் மற்றொன்றில் இருக்காது.

எனவே, ஒரு குறிப்பிட்ட கைப்பேசிகளை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களை அதன் குறியீடு எண்களை வைத்து கண்டுபிடிக்க முடியும். அதேபோல், அக்கைப்பேசிகளை திருடி அதில் வேறு எண் கொண்ட சிம் கார்டை பயன்படுத்தினாலும் சிக்கி விடுவார்கள்.

இந்நிலையில், உ.பி.யின் மீரட் நகரின் காவல்நிலையத்தின் ஒரு காவலர் புதிதாக கைப்பேசி வாங்கியுள்ளார். அது பழுதடைந்து விடவே சரிசெய்ய அளித்தும் பலன் கிடைக்கவில்லை.

இதனால், அந்த கைப்பேசியை உ.பி. காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினரிடம் அளித்துள்ளார். அவர்கள் ஏதேச்சையாக அதன் ஐஎம்இஐ குறியீட்டை சோதித்த போது அதே எண், உ.பி.யின் 13,000 கைப்பேசிகளுக்கு இருப்பது கண்டுபிடிக்கக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும் அதிர்ச்சி அடைந்த மீரட் போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த 13,000 கைப்பேசிகள் வைத்திருப்பவர்களில் ஒருவர் செய்யும் தவறை கண்டுபிடிப்பது சிரமம்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மீரட் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரான அகிலேஷ் என்.சிங் கூறும்போது, ‘இதுபோல் ஒரே குறியீட்டு எண்கள் கொண்ட கைப்பேசிகளால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து நேரிடும். இதன்மூலம் தவறு செய்பவர்களை கண்டுபிடிப்பது மிகவும்

சிரமம். எனவே, வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.

இந்த 13,000 கைப்பேசிகள் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு தவறுதலாக அனைத்திற்கும் ஒரு குறியீடு அளிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. மேலும், திருடப்பட்ட கைப்பேசிகளுகு ஒரே குறியீடு எண் அளித்து இருகலாம் எனவும் கருதப்படுகிறது.

திருடப்பட்ட கைப்பேசிகளை பயன்படுத்தும் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் அதன் குறியீடுகளை மாற்றி போலி எண்களுடன் பயன்படுத்துகின்றனர். இதனால், அவர்களது தவறுகள் காவல்துறையின் சைபர் கண்காணிப்பில் கண்டுபிடிப்பதும் சிரமமாக உள்ளது.

மேலும், இந்த சைபர் பிரிவின் கண்காணிப்புகள் தேசிய அளவில் கிடையாது. அவற்றை ஒவ்வொரு மாநிலங்களுக்கு அனுப்பி கண்காணிப்பதும் மிகவும் சிரமமாகி விடுகிறது.

இச்சூழலை பயன்படுத்தி, திருடப்படும் கைப்பேசிகள் அருகிலுள்ள மாநிலங்களுக்கு அனுப்பி அதன் குறியீடு எண்கள் மாற்றி விற்கப்பட்டு விடுகிறது. இதனால் தான் திருடப்படும் பெரும்பாலானக் கைப்பேசிகள் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x