Last Updated : 05 Jun, 2020 12:07 PM

 

Published : 05 Jun 2020 12:07 PM
Last Updated : 05 Jun 2020 12:07 PM

கர்ப்பிணி யானையை வெடிவைத்துக் கொன்ற வழக்கில் தனியார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கைது: கேரள அமைச்சர் தகவல்

கோப்புப்படம்

பாலக்காடு

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சில்வர் வேலி வனப்பகுதியில் அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து யானையைக் கொன்ற வழக்கில் ஒருவரை வனக்குற்றப்பிரிவுத் துறையினர் கைது செய்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணிப் பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை யாரோ வழங்கியுள்ளனர். அந்தப் பழத்தை யானை தின்றபோது அது வெடித்ததில் யானையின் தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன.

இந்தச் சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றித்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்ற நிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்தப் பெண் யானையை உடற்கூறு ஆய்வு செய்தபோது ஒரு மாதமே ஆன குட்டி வயிற்றில் இருந்தது தெரியவந்தது.

அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி, ஆளுநர் ஆஃரிப் கான் உள்ளிட்டோர் மாநில அரசை வலியுறுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று பேட்டியளித்த மாநில முதல்வர் பினராயி விஜயன், “யானையைக் கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள். அனைவரும் எழுப்பும் கவலைகள், அக்கறைகள் வீணாகாது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதுவரை 3 பேர் மீது வலுத்த சந்தேகம் அடைந்து அவர்களை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், இருவரையும் தேடி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் யானையைக் கொன்ற வழக்கில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வனக்குற்றப்பிரிவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கேரள வனத்துறை அமைச்சர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொலை செய்த விவகாரத்தில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் பெயர் பி. வில்சன். தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இன்று மாலைக்குள் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே வனத்துறையினர் நேற்று 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் அதில் இருவர் விளைநிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதைத் தடுக்க அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்தோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் யானைக்கு வழங்கினார்களா என்பதை வனத்துறையினர் உறுதி செய்யாததால் அவர்களைக் கைது செய்யவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x