Last Updated : 05 Jun, 2020 08:33 AM

 

Published : 05 Jun 2020 08:33 AM
Last Updated : 05 Jun 2020 08:33 AM

வந்தே பாரத் மிஷன்; ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர்: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்துவரும் மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் கடந்த மே 7-ம் தேதி முதல் இதுவரை 1.07 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை முதல்கட்ட வந்தே பாரத் திட்டம் முடிந்து 2-வது கட்டம் நடந்து வருகிறது. இந்த 2-வது கட்டம் வரும் 13-ம் தேதி வரை இருக்கும். இதற்கிடையே 3-வது கட்ட வந்தே பாரத் திட்டத்துக்காக மத்திய அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது.

முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் மே 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் கப்பல், விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள். 2-வது கட்ட வந்தே பாரத் திட்டம் மே 17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை சொல்லப்பட்டு பின்னர் ஜூன் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்வஸ்தவா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

''முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 15 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள். 2-வது கட்டத்தில் 337 விமானங்கள் மூலம் 38 ஆயிரம் பேர் வரை அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுராக் ஸ்ரீவஸ்தவா: கோப்புப் படம்.

2-வது கட்ட வந்தே பாரத் திட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனம் 103 விமானங்களை இயக்குகிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை 454 விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கும் இயக்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 123 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதில் 17 ஆயிரத்து 485 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள், 11 ஆயிரத்து 511 பேர் மாணவர்கள், 8 ஆயிரத்து 633 பேர் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் நில எல்லைகள் வழியாக 32 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர்.

தாயகம் வருவதற்காக ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 565 இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், அரசின் விதிமுறைப்படி தவிர்க்க முடியாத காரணங்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், மாணவர்கள், வேலையிழந்து வெளியேற்றத்துக்காகக் காத்திருப்போர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளது.

3-வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள்''.

இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x