Published : 04 Jun 2020 06:57 PM
Last Updated : 04 Jun 2020 06:57 PM

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ‘துலிப்’ பயிற்சி திட்டம்; 25,000 புதிய பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள்

புதுடெல்லி

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் துலிப் என்னும் பயிற்சித் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சரும், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சரும் இணைந்து தில்லியில் இன்று துவக்கி வைத்தனர்.

சமீபத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு துலிப் (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் முன்மாதிரியானத் திட்டத்தை நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், பொலிவுறு நகரங்களிலும் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இணைந்து இன்று துவக்கி வைத்தனர்.

இந்தத் திட்டத்துக்கான இணையதளத்தையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர், திரு. அம்ரித் காரே; வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் செயலாளர், துர்கா ஷங்கர் மிஸ்ரா, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர், அனில் சகஸ்ரபுத்தே மற்றும் இரு அமைச்சகங்கள் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பொக்ரியால், நாட்டைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்த வேண்டும் என்னும் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத்தோடு இந்தத் திட்டம் ஒத்திருப்பதாகத் தெரிவித்தார். நமது மாணவர்களுக்கு செய்முறை அனுபவத்தை அளித்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களின் செயல்பாட்டில் புதிய யோசனைகளையும், புதுமையான எண்ணங்களையும் புகுத்த துலிப் திட்டம் ஒரு கருவியாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

இளைஞர்களைப் பாராட்டிய பொக்ரியால், நமது நாட்டில் புத்திசாலித்தனத்துக்குக் குறைவில்லை என்றும், கூகிள், மைக்ரோசாப்ட், அடோப் போன்ற உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் இந்தியாவைச் சேர்ந்தவர்களே இருக்கின்றனர் என்றும் கூறினார். தொழில் துறை/பொதுத் துறை நிறுவனங்கள்/அரசு/அரசு சாரா அமைப்புகள் ஆகியவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் வெளிப்படுத்தியதன் மூலம் தங்கள் திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதிலும் உள்ள 4400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களில் பயிற்சி வாய்ப்புகளை துலிப் திட்டம் வழங்கும் என்று பொக்ரியால் கூறினார். அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தத் திட்டத்துக்காக எடுத்த முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான செயல்முறைகள் மூலம் சீரமைக்க இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை துலிப் தளம் வழங்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இது போன்றத் திட்டங்கள் ஒரு கோடி மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வருங்காலத்தில் அளிக்கும் என்று மனிதவள மேம்பாடு அமைச்சர் மேலும் கூறினார்.

இந்தத் திட்டத்தைப் பற்றியத் தகவல்களை வழங்கிய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 25,000 புதிய பட்டதாரிகளுக்கு முதல் வருடத்திலேயே பயிற்சி வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பரந்து விரிந்த செயல்பாடுகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமில்லாமல், சுலபமாக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஒரு பெரிய ஆதாரத்தை தொழில் துறைக்கு வழங்கும்.

பி. டெக், பி. ஆர்க், பி. பிளான், பி .எஸ்சி ஆகியப் படிப்புகளை முடித்த எந்தப் பட்டதாரியும், பட்டம் பெற்ற 18 மாதங்களுக்குள்

https://internship.aicteindia.org/module_ulb/Dashboard/TulipMain/index.php என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x