

மாநிலங்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அந்தக் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
கர்ஜன் தொகுதியைச் சேர்ந்த அக்சய் படேல், கப்ரடா தொகுதியைச் சேர்ந்த ஜிது சவுத்ரி ஆகிய எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் சார்பில் இருவரும் என 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் சக்திசின்ஹா கோகில், பரத்சின்ஹா சோலங்கி இருவரும் போட்டியிடுகின்றனர்.
மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி இரு வேட்பாளர்களை இறக்கியுள்ள நிலையில் ஒரு வேட்பாளர் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசுக்கு 103 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரு எம்எல்ஏக்கள் பாரதிய பழங்குடியினக் கட்சிக்கும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் உள்ளனர். 7 இடங்கள் காலியாக உள்ளன. இரு இடங்கள் நீதிமன்ற வழக்கிலும், 5 இடங்கள் எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காலியாக உள்ளன. இந்த 5 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தனர்.
இந்த சூழலில் குஜராத் காங்கிரஸ் கட்சியின் இரு எம்எல்ஏக்களான அக்சய் படேல், ஜிது சவுத்ரி இருவரும் நேற்று சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இன்று சபாநாயகர் திரிவேதி அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 66 ஆகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரை நேற்று காந்தி நகரில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கீர்த்தி படேல், லலித் வசோயா, லலித் ககாதரா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் முதல்வர் ரூபானியைச் சந்தித்துப் பேசியது பல்வேறு ஊகங்களை எழுப்பியது. இதுகுறித்து கீர்த்தி படேல் கூறுகையில், “முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் ஆகியோரைச் சந்தித்து தொகுதி நலன் குறித்துப் பேசினோம்.
வடக்கு குஜராத்தில் அதிகமான கரோனா பாதிப்பு இருப்பதால் தார்பூர் மருத்துவமனையில் வசதிகளை அதிகப்படுத்தக் கோரினோம். மற்ற எம்எல்ஏக்கள் இருவரும் லாக்டவுன் காலத்தில் மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரினார்கள்” எனத் தெரிவித்தார்.