Last Updated : 04 Jun, 2020 08:25 AM

 

Published : 04 Jun 2020 08:25 AM
Last Updated : 04 Jun 2020 08:25 AM

விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை 

விஜய் மல்லையா, பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவி்ட்டதால் அவர் எந்நேரமும் மும்பை அழைத்துவரப்படலாம் என சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா அழைத்துவரப்படும் விஜய் மல்லையா முதலில் சிபிஐ வசம் உள்ள வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள மும்பைஆர்தர் சிறையில் அடைக்கப்படுவார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை ஏற்க நீதிமன்றம் கடந்த மாதம் 14-ம் தேதி மறுத்துவி்ட்டது. இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு இருந்த 3 சட்ட வாய்ப்புகளும் முடிந்ததால் அவரை இந்தியா அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவு தீவிரப்படுத்தியது.

அந்த பணிகள் அனைத்தும் முடிந்ததால் அவர் வரும் நாட்களில் எந்தநேரத்திலும் மல்லையாவுடன் சிபிஐ அதிகாரிகள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

மதுபான ஆலை, விமான நிறுவனம் எனப் பல்வேறு தொழில்களை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரைத் தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தபோதிலும் சில மணிநேரத்தில் ஜாமீன் பெற்றார். அப்போதிருந்து ஜாமீனில் வெளியே இருக்கும் மல்லையா நீதிமன்றத்தில் தன்னை நாடு கடத்துவற்கு எதிரான வழக்கைச் சந்தி்த்து வந்தார்.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணிகள் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது. ஏற்கெனவே லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தத் தடையில்லை எனக் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு வந்த 20 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதால், உச்ச நீதிமன்றத்தி்ல் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை கடந்த மாதம் 14-ம் தேதி விசாரித்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க மல்லையாவுக்கு இருந்த கடைசி சட்ட வாய்ப்பும் முடிந்துவிட்டதால் அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பணிகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் விரைவுப்படுத்தினர்.

இதுகுறித்து அமலாக்கப்பிரிவின் மூத்த உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில் “ மல்லையாவை இந்தியா அழைத்துவரும் அனைத்து சட்டப்பணிகளும் முடிந்துவிட்டன. வரும் நாட்களில் அவர் எந்த நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்” எனத் தெரிவித்தார்

சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ மல்லையாவை நாடு கடத்தும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. மல்லையாவுக்கு எதிராக முதன்முதலில் சிபிஐதான் வழக்குப்பதிவு செய்தது என்பதால், அவரை நாங்கள்தான் விசாரணக்கு எடுப்போம். மல்லையாவுடன் எந்நேரமும் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இந்தியா புறப்படலாம்.

மும்பைக்கு அவரை அழைத்துச் செல்கிறோம். மும்பை விமானநிலையத்தில் அவருக்கு மருத்துவப்பரிசோதனை நடக்கும் ஒருவேளை பகலில் மும்பையி்ல் விமானம் தரையிறங்கினால் முதலில் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அதன்பின் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துவோம்.

லண்டன் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போதே மல்லையா இந்தியா அழைத்துச் செல்லப்பட்டால் அவருக்காக பிரத்யேகமாக மும்பை ஆர்தர் சாலைசிறை தயார் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அனித்துள்ளோம். ஆதலால், மல்லை ஆர்தர் சிறையில்தான் அடைக்கப்படுவார்” எனத் தெரிவித்தனர்

மும்பை ஆர்தர் சிறையில் மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி அப்துல் கசாப், அபு சலீம், சோட்டா ராஜன், முஸ்தபா தோசா, பீட்டர் முகர்ஜி போன்றோர் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், விஜய் மல்லையாவின் லண்டன் வழக்கறிஞர் இந்தத் தகவலை மறுத்துள்ளார். அவர் கூறுகையில் “ சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சொல்வது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இ்ப்போதைக்கு மல்லையா இந்தியா செல்லமாட்டார்கள். இன்னும் தாமதமாகும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x