

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், புலம்பெயர்ந்து வேறுமாநிலங்களுக்கு பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் வருமானமின்றி வாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நிவாரணமாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் "கரோனா வைரஸ் தொற்று பிரச்சினை காரணமாக கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லல்படுகின்றனர். எனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அமைப்புசாரா பிரிவில் வரும் தொழில்களில் பணிபுரியும் நபர்களுக்கும் ஒருமுறை நிவாரணமாக அவர்கள் வங்கிக் கணக்கில் தலா ரூ.10 ஆயிரம் செலுத்தவேண்டும். பிரதமரின் குடிமக்களுக்கான நெருக்கடி கால உதவி மற்றும் நிவாரண நிதியில் (பிஎம்-கேர்ஸ்) ஒரு பகுதியை இதற்காக பயன்படுத்தலாம்" என தெரிவித்துள்ளார்.