Published : 03 Jun 2020 07:24 AM
Last Updated : 03 Jun 2020 07:24 AM

கேரளாவில் பழத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாசு வெடித்து கருவுற்ற யானை உயிரிழப்பு

கேரளாவில் அன்னாசி பழத்தை சாப்பிட்டபோது அதில் மறைத்து வைத்திருந்த பட்டாசு வெடித்தது. இதையடுத்து ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திருவனந்தபுரம்: கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதான கருவுற்ற யானை, உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. அந்த கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.

ஆனால் சில விஷமிகள், அன்னாசி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்து சிதறியது. இதில் யானையின் நாக்கு, வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற யானை அங்கும் இங்கும் ஓடி, அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது.

தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 கும்கி யானைகளின் உதவியுடன் கருவுற்ற யானையை மீட்டனர். கால்நடை மருத்துவர்கள் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடந்த 27-ம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை மலப்புரம் வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x