Published : 02 Jun 2020 08:39 PM
Last Updated : 02 Jun 2020 08:39 PM
புதுடெல்லி- அமிர்தசரஸ் விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக நக்கோடர் அருகிலிருந்து சுல்தான்பூர், லோதி, கோயிந்த் வால் சாகிப், கடூர் சாகிப் ஆகிய இடங்கள் வழியாக அமிர்தசரஸ் நகருக்கு புதிய பசுமைவழிச்சாலை தொடர்பு ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை, சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
அமிர்தசரஸில் இருந்து குருதாஸ்பூர் செல்லும் சாலையும் முழுமையாக மேம்படுத்தப்படும் என்றும், சிக்னல் எதுவும் அற்ற சாலை வழியாக இது இருக்கும் என்றும் அவர் கூறினார். இதனால் நக்கோடரில் இருந்து அமிர்தசரஸ் வழியாக அல்லது கர்தர்பூர் வழியாக குருதாஸ்பூர் பயணிக்க முடியும். இந்தப் பசுமை வழிச்சாலை, அமிர்தசரஸ் நகரத்தை குறுகிய காலத்தில் விரைந்து சென்றடையும் மாற்று வழியாக இருக்கும். அது மட்டுமல்லாமல், மற்ற மத தலங்களான சுல்தான்பூர், லோதி, கோயிந்த் வால், கடூர் சாகிப் மற்றும் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பஞ்சாபில் உள்ள டேரா பாபா நானக் கர்த்தார்பூர் சாகிப் சர்வதேச காரிடார் ஆகிய இடங்களுக்கும் செல்ல முடியும்.
இந்த விரைவுப் பாதையின் மூலமாக பயணம் செய்வதால் அமிர்தசரசில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணம் செய்யும் நேரமும் தற்போதைய எட்டு மணி நேரத்தில் இருந்து சுமார் நான்கு மணி நேரமாகக் குறையும் என்று கட்கரி தெரிவித்தார். இதனால் பஞ்சாப் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்த விரைவு பாதைக்காக முதலாவது கட்டமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT