Published : 02 Jun 2020 07:14 PM
Last Updated : 02 Jun 2020 07:14 PM

ஆரஞ்சு எச்சரிக்கை; தீவிரப் புயலாகிறது நிசர்கா

புதுடெல்லி

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து தீவிரப் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கை வருமாறு;
கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து, தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் இன்று ( 2020 ஜூன் 2-ம் தேதி) கிழக்கு மத்திய அரபிக்கடலில் அட்சரேகை 15.6 டிகிரி வடக்கு, தீர்க்கரேகை 71.2 டிகிரி கிழக்கு அருகே, பாஞ்சிமுக்கு(கோவா) மேற்கு-வடமேற்கில் 280 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு ( மகாராஷ்டிரா) தெற்கு-தென்மேற்கில் 430 கிலோ மீட்டர் தொலைவிலும் , சூரத்துக்கு (குஜராத்) தெற்கு-தென்மேற்கில் 640 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து தீவிரப் புயலாக மாறக்கூடும். இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அடுத்த சில மணி நேரத்தில், இது வடக்கு திசையில் நகர்ந்து, பின்னர் வளைந்து வடக்கு - வடகிழக்கு திசையில் பயணித்து, வடக்கு மகாராஷ்டிரா, அதையொட்டியுள்ள தெற்கு குஜராத் கரையோரத்தில், ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமனுக்கு இடையே அலிபாக் அருகே ( ராய்கட் மாவட்டம், மகாராஷ்டிரா) ஜூன் 3-ஆம்தேதி பிற்பகலில் தீவிரப் புயலாக அதிகபட்சம் மணிக்கு 100 - 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையைக் கடக்கும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x