Last Updated : 02 Jun, 2020 04:24 PM

 

Published : 02 Jun 2020 04:24 PM
Last Updated : 02 Jun 2020 04:24 PM

பிஎம் கேர்ஸ் நிதியை பொதுநலஅறக்கட்டளையாக அறிவிக்க மனு: மத்திய அரசு கடும் எதிர்ப்பு; மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பிரதமர் மோடி : கோப்புப்படம்

நாக்பூர்,

கரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியை பொது நல அறக்கட்டளையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்தியஅரசு இரு வாரங்களில் பதில் அளிக்க மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வுஇன்று உத்தரவி்ட்டுள்ளது

மத்தியஅரசு சார்பில் ஆஜராகிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், கடும் எதிர்ப்புத் தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடிசெய்ய வாதிட்டார்

கரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல எனவே ஆரிடிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி ஆர்டிஐ விண்ணப்பதாரர் ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி என்பவர் கேட்டிருந்த விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

அதில், “பிஎம் கேர்ஸ் நிதியம் தகவலுரிமை சட்டம், 2005 பிரிவு 2 ஹெச்-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் வராது. இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டு விவரங்களை அளிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

இதேபோன்ற ஓர் மனு கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்தமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இந்த சூழலில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வி்ல் வழக்கறிஞர் அரவிந்த் வாக்மாரே ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அரசால் உருவாக்கப்பட்டது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்தும் மக்கள் அளிக்கும் நிதியைப் பெற்று கரோனா அவசரகாலத்தில் மக்களுக்கு உதவ அமைக்கப்பட்டது.

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளைக்கு பிரதமர் மோடிதான் தலைவர், உள்துறை, பாதுகாப்பு மற்றும் நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அறக்கட்டளையில் பிரதமர் மோடி, மற்றும் 3 உறுப்பினர்கள் தவிர்த்து, கூடுதலாக 3 உறுப்பினர்களை அறக்கட்டளைத் தலைவர் நியமிக்க வேண்டும்.

ஆனால், மார்ச் 28-ம் தேதிவரை அவ்வாறு எந்த உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை. நியமி்க்கப்பட உள்ள 3 உறுப்பினர்களில் 2 பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும், நியமனம் வெளி்ப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

இந்த பிஎம் ேகர்ஸ் நிதி அறக்கட்டளை குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அதில் திரட்டப்பட்ட நிதி விவரங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகமட்டுமே செலவழிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியி்ல் அந்த அறக்கட்டளையின் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை இணையதளத்தில் வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் நீதிபதிகள் எஸ்.பி. சுக்ரே, ஏ.எஸ் கிலோர் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மத்தியஅரசு தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் அணில் சிங் ஆஜாராகினார்.

அவர் வாதிடுகையில், “ இதேபோன்ற மனு கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அது தள்ளுபடி செய்யப்பட்டது அதேபோல்இதையும் தள்ளுபடி செய்ய ேவண்டும்” எனத் தெரிவித்தார்

ஆனால் நீதிபதிகள் கூறுகையில் “ மனுதாரர்கள் பல்வேறு நிவாரணம் கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஆதலால், இந்த மனுமீது மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஆதலால், அடுத்த 2 வாரங்களுக்குள் மத்தியஅரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x