Last Updated : 02 Jun, 2020 02:39 PM

 

Published : 02 Jun 2020 02:39 PM
Last Updated : 02 Jun 2020 02:39 PM

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் போலி இணையதளம்: டெல்லியில் 4200 பேர்களிடம் மோசடி

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் பெயரில் 4200 பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் பெயரில் போலி இணையதளம் துவங்கி டெல்லியில் ரூ.300 மற்றும் ரூ.500 வசூல் செய்யப்பட்டுள்ளது.

போலி இணையதளங்கள் உருவாக்கி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இந்தவகையில் புதிதாக ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மத்திய அரசு இணையதளம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், செவிலியர், வார்டுபாய் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கானப் பணிகளின் வேலைக்கு ஆள் எடுப்பதாகக் கூறி அறிவிக்கை வெளியிடப்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள நகரவாசிகள் குறி வைக்கப்பட்டனர்.

இதைப் பார்த்து ஏமாந்த அப்பகுதிவாசிகள் பலரும் அப்போலி விளம்பரப் பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடம் அதன் பதிவுத்தொகையாக ரூ.300 மற்றும் ரூ.500 செலுத்தும்படிக் கூறி வசூல் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் கணக்குகளை அளித்து வசூல் செய்யப்பட்டதில் சுமார் 4200 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதன் மீதானப் புகாரில் ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதுபோல், மத்திய, மாநில அரசுகளின் பெயரில் போலி இணையதளங்கள் உருவாக்கி மோசடி செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதற்கு முன் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் சார்பிலும் ஒரு கும்பல் போலி இணையதளம் உருவாக்கி இருந்தது. இதிலும் விவசாயிகளிடம் பல்வேறு வகைகளில் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பெயரிலும் போலியான இணையதளங்கள் மற்றும் ‘கால் சென்டர்கள்’ உருவாக்கியும் மோசடி நடைபெறுகிறது. இதன் அலுவலகங்கள் டெல்லியில் அவ்வப்போது துவக்கப்படுகின்றன.

நாடு முழுவதிலும் இருந்து எம்பிஏ, மருத்துவம், பொறியியல் உள்ளிட்டப் பட்டதாரி இளைஞர்களும் விண்ணப்பிக்கின்றனர். கால் சென்டர்கள் மூலமாகவும் பலரது கைப்பேசிகளுக்கு பணிக்கான நேர்முகத்தேர்வு எனப் போன் செய்யப்படுகிறது.

துவக்கத்தில் எந்த தொகையும் பெறாமல் விண்ணப்பதாரர்கள் டெல்லி வரவழைக்கப்படுகின்றனர். பிறகு அந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பல நிறுவனப் பணிகளுக்கானப் போலி உத்தரவு அந்த அலுவலகத்தில் அளிக்கப்படுகிறது.

இதற்காக தம் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சேவைக் கட்டணம் எனவும், வங்கிகள் மூலமாக மாத ஊதியம் அளிக்க புதிய கணக்கு துவக்கும் பெயரிலும் ரூ.10,000 வரை ரொக்கம் வசூலிக்கப்படுகிறது.

வரும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை வரவழைக்க பல்வேறு வங்கிகளின் கணக்கு துவக்கும் விண்ணப்பங்களுடன் அதன் போலி அலுவலர்களும் அங்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு தொகைகளை சேர்ப்பிப்பவர்களுக்கு வங்கிக் கணக்கு எண் மற்றும் ஏடிஎம் அட்டை தபாலில் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.

மகிழ்வுடன் வீடு திரும்பிக் காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தவகையில் ஏமாற்றுபவர்களை டெல்லி காவல்துறை பலமுறை கைது செய்தும் அந்த கும்பல்கள் இடம் மாற்றி தம் கைவரிசைகளை தொடர்ந்து காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x