Published : 02 Jun 2020 07:14 AM
Last Updated : 02 Jun 2020 07:14 AM

திருப்பதி கோயில் 8-ம் தேதி திறப்பு?- தரிசன ஏற்பாடுகளில் தேவஸ்தான அதிகாரிகள் மும்முரம்

திருப்பதி

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 72 நாட்களாக பக்தர்களின் தரிசனத்தை ரத்து செய்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், வரும் 8-ம் தேதி முதல்பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்யும் வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தப்பட்டது. இதேபோல திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், திருப்பதி கோவிந்தராஜர் கோயில், ஸ்ரீநிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் என அனைத்து தேவஸ்தான பாராமரிப்பு கோயில்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஆகம சாஸ்திரங்களின்படி அனைத்து கோயில்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு 5-ம் கட்டமாக ஊரங்கை நீட்டித்தபோதிலும், வழிபாட்டுத் தலங்களை 8-ம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என அறிவித்தது. அதன்படி ஆந்திராவில் வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளன. இதில்அதிகமாக பக்தர்கள் செல்லும்முக்கிய கோயில்களில் ஆன்லைன்மூலம் தரிசனத்துக்கு முன்பதிவுசெய்து பக்தர்களை சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி வரும் 8-ம் தேதி ஆந்திராவில் முக்கிய கோயில்களான திருப்பதி ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், கானிப்பாக்கம் விநாயகர் கோயில், விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயில், விசாகப்பட்டினம் சிம்மாச்சலம் நரசிம்மர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இணையதளம் மூலம் பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர். கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் தரிசன வரிசை, லட்டு பிரசாத மையம், தலை முடி காணிக்கை செலுத்துமிடம், அன்னதான மையம் போன்ற முக்கிய இடங்களில் 3 அடி இடைவெளி இருக்கும் வகையில் தரையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மேலும், ஒரு மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

அந்த வகையில் ஒரு நாளைக்குசுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரைமட்டுமே தரிசிக்க இயலும். மற்றவர்களுக்கு மறுநாள்தான் வாய்ப்பு வழங்க நேரிடும். கண்டிப்பாக அனைத்து பக்தர்களும் முகக் கவசம் அணிய வேண்டும். அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகனங்கள் முதற்கொண்டு, பக்தர்கள், அவர்கள் கொண்டு செல்லும்பொருட்கள் போன்ற அனைத்தும்கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும் தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் தேவஸ்தான ஊழியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும். மொட்டை அடிப்பதற்கு முன்பும், பின்னரும் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். கோயில் அருகே உள்ள புஷ்கரணியில் சில மாதங்கள் வரை பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளை அளிக்க புதிய நிபந்தனைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

மத்திய அரசின் நிபந்தனையின்படி ஒரு அறையில் 2 பக்தர்கள் மட்டுமே தங்க வேண்டும். அதன்படியே திருமலையிலும் அறைவழங்க ஏற்பாடுகள் செய்யப்படலாம். என். மகேஷ்குமார்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x