Last Updated : 01 Jun, 2020 10:08 AM

 

Published : 01 Jun 2020 10:08 AM
Last Updated : 01 Jun 2020 10:08 AM

உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா: கரோனா பாதிப்பு 1.90 லட்சமாக அதிகரிப்பு; 24 மணி நேரத்தில் 230 பேர் உயிரிழப்பு

கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கரோனாவால் 8 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 91 ஆயிரத்து 819 பேர் குணமடைந்துள்ளனர். 93 ஆயிரத்து 322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவில் நேற்று 230 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,286 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,038 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 350 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 317 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 473 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 194 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 82 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 213 ஆகவும்,ஆந்திராவில் 62 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 51 பேரும், பஞ்சாப்பில் 45 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 28 பேரும், ஹரியாணாவில் 20 பேரும், பிஹாரில் 21 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளாவில் 9 பேரும், இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகாண்டில் தலா 5 பேர், அசாமில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,655 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 29,329 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 333ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 19,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,478 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 16,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,919 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 8,831 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 8,089 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 7,823 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 5,501 பேரும், ஆந்திராவில் 3,679 பேரும், பஞ்சாப்பில் 2,263 பேரும், தெலங்கானாவில் 2,698 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 2,446 பேர், கர்நாடகாவில் 3,221 பேர், ஹரியாணாவில் 2,091 பேர், பிஹாரில் 3,815 பேர், கேரளாவில் 1,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 590 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,948 பேர், சண்டிகரில் 293 பேர் , ஜார்க்கண்டில் 610 பேர், திரிபுராவில் 313 பேர், அசாமில் 1,272 பேர், உத்தரகாண்டில் 907 பேர், சத்தீஸ்கரில் 498 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 331 பேர், லடாக்கில் 74 பேர், மேகாலயாவில் 27 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 25 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 71 பேர், கோவாவில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிமில் ஒருவரும், அருணாச்சலப் பிரதேசமில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகள், மிசோரத்தில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x