Published : 01 Jun 2020 07:55 AM
Last Updated : 01 Jun 2020 07:55 AM

மும்பையிலிருந்து மகன், மருமகளால் துரத்தப்பட்ட 70 வயது மூதாட்டிக்கு உதவிய ரயில்வே அதிகாரிகள்

மகன், மருமகளால் மும்பையில் இருந்து துரத்தப்பட்ட 70 வயது மூதாட்டிக்கு ரயில்வே அதிகாரிகள் உதவியுள்ளனர்.

டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி கேதார்நாத் துபே (70). மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவிலுள்ள தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரைப் பார்க்க கடந்த பிப்ரவரி மாதம் லீலாவதி அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மகனின் உடல் நலம் தேறியதும் மனைவியுடன் சேர்ந்துகொண்டு தனது தாயை கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். இதனால் செய்வதுஅறியாது விழித்த லீலாவதி, மஹுல்காவோன் பகுதியிலிருந்து பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு 13 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளார். குடிநீர், உணவு இல்லாமல் அங்கிருந்து நடந்த வந்த லீலாவதிக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள் லீலாவதியைப் பார்த்து அவருக்குத் தேவையான உணவை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து லீலாவதி கூறும்போது, “நான் என் மகன் வீட்டில் தங்கியிருந்தாலும் நான் சாப்பிடும் உணவுக்கு பணம் கொடுத்து வந்தேன். அவன் உடல் நலம் தேறியதும் என்னை எட்டி உதைத்து வீட்டிலிருந்து துரத்தி விட்டான். நான் நடந்தே இங்கு வந்தேன். எனக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை. என்னிடம் போதிய பணம் இல்லை.

வரும் வழியில் லாரியில் இருந்தவர்கள் எனக்கு பிஸ்கட்டும், நீரும்கொடுத்தனர். இங்கு வந்தபோது ரயில்வே அதிகாரிகள் எனக்கு
உணவு, தங்க இடம் தந்தனர். தற்போது டெல்லி செல்ல ஏ.சி. வகுப்பு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்துள்ளனர். இவர்கள் என்னுடைய குடும்ப நண்பர்களாகி விட்டனர்” என்றார்.

இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை அதிகாரியும், மேற்கு மண்டல மூத்த டிவிஷன் அதிகாரியுமான சுஹானி மிஸ்ரா, ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் ஜீதேந்திரா ஜாட் ஆகியோர் லீலாவதிக்கு உதவியுள்ளனர். ரயில்வே அதிகாரிகளின் இந்த மனிதநேய சேவை சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x