Last Updated : 31 May, 2020 03:44 PM

 

Published : 31 May 2020 03:44 PM
Last Updated : 31 May 2020 03:44 PM

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு எவ்வளவு அளித்தீர்கள்? விவரங்களை தயவு செய்து கூறுங்கள்: மோடிக்கு கபில் சிபல் வலியுறுத்தல் 

பிஎம் கேர்ஸ் என்பதை உருவாக்கினீர்கள், இதன் மூலம் தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிவாரனத்தொகை அளித்தீர்கள் என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

மெய்நிகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் சிபல் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம், பிஎம் கேர்ஸ் நிதியத்தை உருவாக்கினீர்களே அதிலிருந்து கரோனா லாக்டவுன் பாதிப்பு தொழிலாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது? இந்தக் கேள்விக்கு அவர் பதில் அளித்துத்தான் ஆகவேண்டும். சில தொழிலாளர்கள் நடந்து இறந்துள்ளனர், சிலர் ரயில்களில் இறந்துள்ளனர். சில பசி, பட்டினியில் இறந்துள்ளனர்.

பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 12-ஐ உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பேரிடர் காலங்களில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் வாழ்க்கையை இழந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கான நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியில் இறந்தவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்ததா? இந்தச் சட்டத்தில் கணவனை இழந்த பெண்களுக்கும் அநாதைகளுக்கும் நிவாரணம் வழங்கும் பிரிவு உள்ளது. இத்தகையோடுக்கு இந்த அரசு என்ன கொடுத்தது, எவ்வளவு கொடுத்தது? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

வரும் நாட்களில் நம் நாடு பொருளாதாரத்தில் எதிர்மறைப் பகுதிக்குச் செல்லவிருக்கிறது. இதை ஆர்பிஐ-யும் உறுதி படுத்தியுள்ளது. இந்த நாட்டில் 45 கோடி தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களது நிலை என்ன? இதனால்தான் கூறுகிறேன் நாம் எதிர்காலம் என்னவென்பதைப் பார்க்கவேண்டும், அதனால்தான் கடந்த 6 ஆண்டுகளாக இந்த அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு ஏழைகளை மீட்க புதிய கொள்கைகளை வடிவமைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் கபில் சிபல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x