Published : 31 May 2020 07:20 AM
Last Updated : 31 May 2020 07:20 AM

ஏழுமலையான் கோயில் லட்டு ஹைதராபாத்தில் விற்பனை

ஹைதராபாத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் இன்று முதல் தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் சுமார் 70 நாட்களாக சுவாமியை தரிசிக்க இயலாமல் பக்தர்கள் காத்திருக்கின்றனர். மத்திய அரசு இம்முறை கோயில்களை திறக்க அனுமதி வழங்கினால், திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதனிடையே, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர்களில் தேவஸ்தான திருமண மண்டபங்கள் அல்லது தகவல் மையங்களில் ஏழுமலையானின் லட்டு பிரசாதத்தை 50 சதவீத குறைந்த விலையில் ரூ.25-க்கு ஒரு லட்டு வீதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் லட்டு பிரசாதத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆனால், போக்குவரத்து காரணமாக சென்னை உட்பட மற்ற நகரங்களில் லட்டுவிற்பனையை தொடங்க இயலாமல், இதற்கு தொடர்புடைய அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதிகேட்கப்பட்டிருந்தது.

இதற்கு தெலங்கானா அரசு அனுமதி வழங்கியதால், இன்று முதல் ஹைதராபாத் ஹிமாயத் நகர் தேவஸ்தான தகவல் மையத்தில் காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட உள்ளது.இதற்காக தினமும் 60 ஆயிரம்லட்டு பிரசாதங்கள் ஹைதராபாத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, வேலூர் மற்றும் கன்னியாகுமரியில் லட்டு விநியோகம் செய்ய தமிழக அரசிடம் போக்குவரத்துக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் திருமலையிலிருந்து நேரடியாக மேற்குறிப்பிட்ட ஊர்களில் ரூ.25க்கு ஒரு லட்டு வீதம்பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தான உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x