Published : 30 May 2020 11:21 AM
Last Updated : 30 May 2020 11:21 AM

கரோனாவைச் சமாளிக்க அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் தயார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கேரளாவில் உள்ள 1,296 அரசு மருத்துவமனைகளில் 49,702 படுக்கைகளும், 1,369 அவசர சிகிச்சைப் படுக்கைகளும், 1,045 வென்டிலேட்டர்களும் தயாராய் வைக்கப்பட்டிருப்பதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தின் கரோனா தொற்று பரவல் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

“கேரளாவில் நேற்று புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 33 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 23 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா 10 பேருக்கும், கர்நாடகா டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இன்று ஒருவருக்கு நோய் பரவியுள்ளது. திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை சிறையில் உள்ள 2 கைதிகளுக்கும், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் இருவருக்கும், ஒரு சுகாதாரத்துறை ஊழியருக்கும் நேற்று நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 10 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை கேரளாவில் கரோனா உறுதி தொற்று செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,150 ஆகும். அவர்களில் தற்போது 577 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் 231 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 1,23, 087 பேர் வீடுகளிலும், 1,080 பேர் மருத்துவமனையிலும் கண்காணிப்பில் உள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 11, 468 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 10,635 பேருக்கு நோய் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் மேலும் 22 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டதன் மூலம் கேரளாவில் நோய்த் தீவிரமுள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

நெய்யாற்றின்கரை சிறையில் உள்ள 2 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கண்ணூர் மாவட்டச் சிறையில் உள்ள ஒரு கைதிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த சிறைகளில் உள்ள ஊழியர்கள் அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் கைதிகளுடன் ஒன்றாக அடைக்கப்பட்டு இருந்த சக கைதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக கைதிகளைக் கொண்டு வரும்போது அவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் ஏற்படுத்தப்படும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் மூலம் 620 கோடியே 71 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதில் 227 கோடியே 35 லட்ச ரூபாய் இதுவரை செலவிடப் பட்டுள்ளது. கேரளாவில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 12,191 தனிமைப் படுக்கைகள் உள்ளன. அவற்றில் இப்போது 1,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் நோய்த் தொற்றுப் பரவலை சமாளிக்கும் விதமாக 1,296 அரசு மருத்துவமனைகளில் 49,702 படுக்கைகளும், 1,369 அவசர சிகிச்சை படுக்கைகளும், 1,045 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 866 தனியார் மருத்துவமனைகளில் 81,904 படுக்கைகளும், 6,059 அவசர சிகிச்சைப் படுக்கைகளும், 1,578 வென்டிலேட்டர்களும் உள்ளன.

கேரளா முழுவதும் 851 கரோனா நல மையங்களும் உள்ளன. எனவே, தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அறிவுரையின்படி தேவையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.”
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x