Published : 30 May 2020 07:31 AM
Last Updated : 30 May 2020 07:31 AM

ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக மீண்டும் ரமேஷ்குமாரை நியமிக்க வேண்டும்- மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக மீண்டும் ரமேஷ் குமாரை நியமிக்க வேண்டுமென நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு, கரோனா தொற்று ஆரம்பக்கட்டத்தில் இருந்தபோது ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் பஞ்சாயத்துகளுக்கு முதற்கட்டம் முடிவடைந்துள்ளது. அடுத்த தாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற இருந்தது.

ஆனால் எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் ஆளும் கட்சியினர் மட்டுமே போலீஸாரின் உறுதுணையோடு வேட்பு மனு தாக்கல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்துஉயர் நீதிமன்றத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜ கட்சியினர்வழக்கு தொடர்ந்தனர். மேலும், மாநில தேர்தல் ஆணையரான ரமேஷ்குமாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்துவதாக ரமேஷ் குமார் வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில், கரோனா வைரஸ்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. ஆனாலும், பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல்களை நடத்த வேண்டுமென ஆந்திர அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே ஆளும் கட்சி மீது தொடர்ந்து பல புகார்கள் வந்ததாலும், கரோனா தொற்று பரவ தொடங்கியதாலும், ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு ஆந்திர மாநில அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெகன்மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர மாநிலத்தில் இனி மாநில தேர்தல் ஆணையர்களுக்கு வெறும் 3 ஆண்டுகள் மட்டுமேபதவிக் காலம் என அவசர மசோதாவிற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து 3 ஆண்டுகாலம் பணியாற்றிய ரமேஷ் குமாரின் பதவி பறிக்கப்பட்டது.

இதை அடுத்து உடனடியாக, ஆந்திர அரசு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜுவை ஆந்திர மாநில தேர்தல்ஆணையராக நியமனம் செய்தது. நீதியரசர் கனகராஜுவும் விஜயவாடா சென்று தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது தொடர்பாக ரமேஷ் குமார்உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்னமும் 2 ஆண்டுகாலம் தன்னுடைய பதவி காலம் இருந்தாலும், ஆந்திர அரசின் பஞ்சாயத்துறை சார்பில் தனது பணி பறிக்கப்பட்டு விட்டதாக அவர், தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. இருதரப்பிலும் வாதங்கள் நடந்தன. நேற்று இதற்கான தீர்ப்பை நீதிபதி மல்லேஸ்வரி வழங்கினார். மாநில ஆளுநர் 5 ஆண்டுகால பதவியில் நீடிக்க கடிதம் வழங்கியுள்ள நிலையில் மாநில அரசு, தேர்தல் ஆணையரின் பதவியை பறிக்க உரிமை இல்லை. ஆதலால் இந்த நிமிடத்தில் இருந்து ரமேஷ் குமார் தனது தேர்தல் ஆணையர் பதவில் நீடிக்கிறார். இதற்கான உத்தரவை மீண்டும் ஆந்திர அரசு வழங்கிட வேண்டும் என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x