Published : 29 May 2020 07:58 PM
Last Updated : 29 May 2020 07:58 PM

ஜூன் 1-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு, 8-ம் தேதி முதல் 100% அலுவலகங்கள் செயல்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் கோயில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும், ஜூன் 8 முதல் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் கரோனா தொற்று குறைவாக இருப்பதால், 4‍-ம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதன்படி மாவட்ட மற்றும் புறநகர் ரயில்களை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அனைத்து வர்த்தக நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து மே 31-ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்கத்தில் கோயில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ‘‘மதம் தொடர்பான இடங்களில் கூட்டத்திற்கு அனுமதி இல்லை. ஜூன் 8 முதல் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும். உம்பன் புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x