Last Updated : 29 May, 2020 04:46 PM

 

Published : 29 May 2020 04:46 PM
Last Updated : 29 May 2020 04:46 PM

நாட்டிலேயே முதல் மாநிலம்: புலம்பெயர் தொழிலாளர்கள் 60 பேரை விமானம் மூலம் அழைத்து வந்த ஜார்கண்ட் அரசு; நம்பிக்கையளித்த முதல்வர் ஹேமந்த் சோரன்

கரோனா லாக்டவுனால் வேலையிழந்து, வறுமையில் சிக்கி கால்நடையாக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்று வரும் சூழலில், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஜார்கண்ட் அரசு நடவடிக்கைளை எடுத்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்வதையும், சைக்கிளில் ஆயிரக்கணக்கான கிமீ நடந்து செல்வதையும் பார்த்து, கண்டும் காணாமல் பல மாநில அரசுகள் இருக்கும் போது தனி விமானத்தில் அழைத்து வந்துள்ளார் முதல்வர் ஹேமந்த் சோரன்.

இமயமலையில் உள்ள யூனியன் பிரதேசமான லடாக்கில் சிக்கிய ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த 60 தொழிலாளர்ளை தனிவிமானம் மூலம் சொந்த மாநிலம் அழைத்துவர முதல்வர் ஹேமந்த் சோரன் நடவடிக்கை எடுத்துள்ளார். 60 புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள்வாழ்வி்ல் முதன் முதலாக விமானத்தில் பயணித்து இன்று பிற்பகல் டெல்லி வந்துள்ளனர், இன்று மாலை மீண்டும் தனிவிமானம் மூலம் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி அழைத்து வரப்படுகின்றனர்

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல மாநில அரசு டிக்கெட் கட்டணம் செலுத்துவதா அல்லது ரயில்வே ஏற்பதா என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குஇருக்கும்நிலையில், தன் மாநிலத்தைச் சேர்ந்த மக்களை விமானம் மூலம் அழைத்து வர முதல்வர் ஹேமந்த் சோரன் நடவடிக்கைஎடுத்துள்ளது அந்த தொழிலாளர்களை மகி்ழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் லடாக்கில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

லடாக்கில் உள்ள கார்கில் மாவட்டம், படாலிக், கோர்கோடா கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சிக்கிக்கொண்டனர். சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவித்தஅந்த தொழிலாளர்கள் அனைவரும் ட்விட்டர் மூலம் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்பு கொண்டு சொந்த மாநிலம்அழைத்துச்செல்ல உதவி கோரினார்கள்

தொழிலாளர்களின் நிலை குறி்த்து அறிந்த முதல்வர் ஹேம்ந்த சோரன் அவர்களை விமானம் மூலம் டெல்லி கொண்டு சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் ராஞ்சி அழைத்துவர முடிவு செய்தார். இதற்காக லடாக்கின் துணை நிலை ஆளுநரிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மூலம் செய்ய உத்தரவிட்டார்

இந்த நடவடிக்கையின் விளைவாக லாடக்கின் லே நகரில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம், 60 தொழிலாளர்களும் விமானம் மூலம் இன்று பிற்பகல் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர். விமானத்தில் தொழிலாளர்கள் ஏறும் முன் அனைத்துப்பரிசோதனைகளும் முடித்து அனுப்பிவைக்கப்பட்டனர்

இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ எங்கள்மாநில புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்துவர கடமைப்பட்டுள்ளோம். லடாக்கிலிருந்து 60 தொழிலாளர்களுடன் தனி விமானம் ராஞ்சிக்கு வருகிறது. இதற்காக உதவிய லடாக் யூனியன் பிரதேச ஆளுநர், அதிகாரிகள், ஸ்பைஸ்ஜெட், இன்டிகோ விமானநிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

இதுமட்டுமல்லமல் அந்தமான் நிகோபர் வடகிழக்கு மாநிலங்களில் சிக்கியிருக்கும் தொழிலாலர்களை விமானம் மூலம் அழைத்துவர உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் சோரன் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதுவரை எந்த விதமான பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதனால் வேறு வழியின்று தொழிலாளர்கள் மாநில அரசு சார்பில் வர்த்தக விமானத்தில் அழைத்துவர முதல்வர் முடிவு செய்தார் என ஜார்கண்ட் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

லடாக்கிலிருந்து 60 தொழிலாளர்களை விமானம் மூலம் அழைத்துவர ஜார்கண்ட் அரசு ரூ. 8 லட்சம் செலவிடுகிறது. லடாக்கிலிருந்து டெல்லிக்கு பிற்பகலில்வந்து சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் இன்று மாைல 6 மணிக்கு இண்டிகோ விமானத்தின் மூலம்ராஞ்சிக்கு புறப்படுகின்றனர்

தங்கள் வாழ்வில் விமானத்தை பார்க்க மட்டுமே செய்திருந்த தொழிலாளர்கள் முதல்முறையாக விமானத்தில் பயணித்து டெல்லி வந்து சேர்ந்த போது முகத்தில் மகிழ்ச்சியும், புன்னகையுடனும் காணப்பட்டனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x