Published : 29 May 2020 07:32 AM
Last Updated : 29 May 2020 07:32 AM

1.20 கோடி இந்திய மக்களை வறிய நிலைக்கு தள்ளிய ஊரடங்கு- சர்வதேச ஆய்வில் தகவல்

புதுடெல்லி

ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 1.20 கோடி பேர் மிகுந்த ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த மாதம்மட்டும் 1.22 கோடி பேர் வேலைஇழந்துள்ளனர். தினக்கூலி தொழிலாளர்கள், சிறு நிறுவனங்களில் பணி புரிவோர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினசரி பேப்பர் விநியோகம் செய்வோர், சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், கை ரிக் ஷா, தள்ளுவண்டி இழுப்போர் உள்ளிட்டோர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர்நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இந்தியாவில் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் போவதாக தெரிவித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றார். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இலவச எரிவாயு சிலிண்டர், இலவச மின் வசதி, வீட்டு வசதி உள்ளிட்ட வசதிகளை உருவாக்கித் தரும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால், தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மக்களின்வாழ்க்கைத் தரத்தை மிக மோசமான சூழலுக்குத் தள்ளியுள்ளது. தற்போதைய சூழலில் மீண்டும் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவது மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த காலங்களில் வறுமை ஒழிப்புக்கு அரசுகள்மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த ஒரு சில மாதங்களாக நிலவி வரும் ஊரடங்கால் மிக மோசமான சூழலுக்கு கொண்டு சென்றுள்ளது என்று ஐபிஇ குளோபல் ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஷ்வஜித் சிங் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பல்கலை. நடத்திய ஆய்வில் 10.40 கோடி மக்களின் ஒரு நாள் வருமானம் ரூ.225-க்கும் குறைவாக உள்ளது. நடுத்தர வருமானம் நிலவும் நாடுகளிலும் இத்தகைய சூழல்தான் நிலவுகிறது.

உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை எட்டியபோதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உலகம் முழுவதும் 60 சதவீத மக்கள் அதாவது 81.20 கோடிமுதல் 92 கோடி பேர் வறிய நிலைக்குத் தள்ளப்படுவர். அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இது என்று சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்த சூழலில், தற்போது வைரஸ்தாக்குதல் காரணமாக வளர்ச்சி விகிதம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் மைனஸ் நிலைக்குச் செல்லும் சூழல் உருவாகி உள்ளது. இது 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் ஏழை, பணக்காரர்கள் விகிதம்மேலும் அதிகரிக்கும் என்று டெல்லி ஐஐடி பொருளாதார பேராசிரியர் ரித்திகா கெரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x