Published : 28 May 2020 01:20 PM
Last Updated : 28 May 2020 01:20 PM

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சூரிய மின்சக்தி நகரம்: பிரதமர் மோடி விருப்பம்

புதுடெல்லி

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரம் முழு சூரிய மின்சக்தி நகரமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மின்துறை அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது மின்துறை அமைச்சகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் மின்துறையை பாதிக்கும் பிரச்னைகளைக் குறைக்க, மாற்றியமைக்கப்பட்ட கட்டண கொள்கை, மின்சார (திருத்தம்) மசோதா 2020 உள்ளிட்ட கொள்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மின்துறையின் நிதி நீட்டிப்புத்திறனை மேம்படுத்துவது, செயல் திறனை அதிகரிப்பது, வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிப்பதன் அவசியத்தை பிரதமர் வலியறுத்தினார். மாநிலங்கள் மற்றும் பல பகுதிகளில் மின்துறையில் உள்ள பிரச்னைகள், குறிப்பாக மின்விநியோகப் பிரிவில் உள்ள பிரச்னைகளை அவர் சுட்டிக் காட்டினார். எல்லா பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு காணாமல், ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, அந்தந்த மாநிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு மின்துறை அமைச்சகம் தீர்வு காண வேண்டும் என அவர் கூறினார்.

டிஸ்காம் நிறுவனங்கள் தங்களது செயல்திறன் அலகுகளை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடுவதை மின்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் டிஸ்காம் நிறுவனங்களின் கட்டணங்களை, மக்கள் பிறவற்றுடன் ஒப்பிட்டு அறிய முடியும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். மின்துறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் இந்தியாவில் தயாரித்தவையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாக, பிரதமர் கூறுகையில், வேளாண் துறைக்கு உதவும் சூரிய மின்சக்தியை, குடிநீர் குழாய்கள் முதல் குளிர்பதன கிடங்குகள் வரை அனைத்திலும் முழுமையாகப் பயன்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்துவது, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரம் முழு சூரிய மின்சக்தி நகரமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் உலோக வார்ப்பு, மின்னணு வேஃபர்கள், மின்கலம் மற்றும் பெட்டகம் ஆகியற்றை தயாரிப்பதற்கு சுற்றுச்சூழல் மண்டலத்தை மேம்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இது பிற பயன்களோடு வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவும்.

லடாக்கில் கரிம சமநிலை உருவாக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவது பற்றி விருப்பம் தெரிவித்த பிரதமர், சூரிய மின்சக்தி மற்றும் காற்று மின்சக்தி மூலம் கடலோரப் பகுதிகளில் குடிநீர் சப்ளையை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x