

பா.ஜ. கட்சியின் தகவலின்படி, அதன் சார்பில் மே 23 வரை நாடு முழுவதிலும் 19.23 கோடி உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவில் முதன்முறையாக மத்திய அரசால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலாகி வருகிறது. இதன் துவக்கத்தில் பொதுமக்களுக்கு பாஜகவினர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அதன் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாஜகவினர் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். இது குறித்து பாஜகவின் தலைமை அலுவலகம் ஒரு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: ஊரடங்கில் சிக்கிய அனைத்து தரப்பின் ஐந்து கோடி மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க திட்டமிடப்பட்டது. இதில், மே 23 வரை 19.28 கோடி வழங்கியதுடன் அப்பணி இன்னும் தொடர்கிறது.
இதேபோல், ஐந்து கோடி மக்களுக்கு முகக்கவசம் அளிக்கவும் திட்டமிடப்பட்டது. இது 5.2 கோடியாக பொதுமக்கள் இடையே விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுவன்றி, 4.86 கோடி எண்ணிக்கையில் உணவுப் பொருட்களும் தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்பணியில் பாஜகவினரில் 8.23 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற உதவிகளின் மீது பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு கட்சி சார்பில் பதிவாகி வருகிறது. இப்பணியில், பாஜகவினரின் 12.87 லட்சம் பேர் செய்து வருகின்றனர்.