Published : 27 May 2020 07:14 AM
Last Updated : 27 May 2020 07:14 AM

உணவின்றி 76 ஆண்டு வாழ்ந்த குஜராத் சாது பிரகலாத் மறைவு

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சரடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி. 76 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் வாழ்ந்த இவர், வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். பிரகலாத் ஜனி சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அம்மன் கோயில் அருகே சிறிய குகை போன்ற ஆசிரமத்தை அமைத்தார்.

பெண்களைப் போல புடவை, நகைகள் அணிந்து வந்ததால் அவரை சீடர்கள் ‘மாதாஜி’ என்று அழைத்தனர். சாது பிரகலாத் ஜனி அம்பாளின் அருள் காரணமாக 76 ஆண்டுகளாக உணவும் தண்ணீரும் இல்லாமல் வாழ்ந்து வருவதாகக் கூறுவார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான சரடாவுக்கு அழைத்துப் போகும்படி தனது சீடர்களிடம் பிரகலாத் ஜனி கூறியுள்ளார். அதன்படி, சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு நேற்று காலை பிரகலாத் ஜனி காலமானார். அவரது உடல் மீண்டும் பனஸ்கந்தாவில் உள்ள ஆசிரமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்று சீடர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு, தண்ணீர் இல்லாமல் சாது இருப்பதாக அறிந்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரகலாத் ஜனியை 2003 மற்றும் 2010-ம்ஆண்டுகளில் இரு முறை பரிசோதனை செய்தனர். கடந்த 2010-ம் ஆண்டில் 15 நாட்கள் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்து பரிசோதித்தனர். பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், உணவும் தண்ணீரும் இல்லாமல் வாழ்வதற்கு சில தீவிரமான பயிற்சிகளை சாது பிரகலாத் ஜனி மேற்கொள்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x