Published : 26 May 2020 08:48 PM
Last Updated : 26 May 2020 08:48 PM
இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு விகிதம் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி 3.30 சதவீதமாக இருந்தநிலையில் தற்போது 2.87 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:
மத்திய அரசு, மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுடன் சேர்ந்து, கொவிட்-19 தொற்று பரவாமல் தடுப்பது, கட்டுப்படுத்துவது , மேலாண்மை ஆகிய பல்வேறு முயற்சிகளை, முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர நடவடிக்கைகளின் மூலமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உயர் மட்டத்தில் அவ்வப்போது ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
தொற்றுப் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. கைகளைச் சுத்தம் செய்வது, சுவாசத்தூய்மை, அடிக்கடி தொடும் பகுதிகளில் கிருமி நீக்கம் செய்யும் செயல்பாடு ஆகியவை தொற்று பாதிக்காமல் தவிர்க்கும் நடவடிக்கைகள் ஆகும். இந்தச் சிக்கலைச் சமாளிக்க உரிய கொவிட் நடைமுறை அவசியமாகும்.
முகக்கவசம், முக உறைகள் அணிவதை வழக்கமாகக் கொள்ளுதல், முதியோர், பாதிப்புக்குள்ளானோரைப் பாதுகாக்கும் நடைமுறைகள் இதில் அடங்கும். பொது இடங்களில், இடைவெளியைப் பராமரித்தலை, சமூகத் தடுப்பு மருந்தாக உலகம் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராகக் கையாண்டு வருகிறது.
இந்தியா தனது சோதனைத் திறனை அபரிமிதமாக அதிகரித்துள்ளதுடன், உருவெடுத்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பயணித்து வருகிறது. இந்தியா தற்போது நாளொன்றுக்கு சுமார் 1.1 லட்சம் மாதிரிகளை சோதனை செய்து வருகிறது. சோதனைக்கூடங்களின் எண்ணிக்கை, ஷிப்டுகள், ஆர்டி-பிசிஆர் எந்திரங்கள், பணியாளர்களை அதிகரித்து வருவதன் மூலமாக செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வரை, இந்தியாவில், மொத்தம் 612 சோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 430 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் - ஐசிஎம்ஆர் நடத்துவதாகும். 182 தனியார் ஆய்வகங்கள் கொவிட்-19 சோதனையை மேற்கொண்டு வருகின்றன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உரிய வழிகாட்டும் நெறிமுறைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி சோதனை செய்தல், அறிகுறியில்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துதல் ஆகிய விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 சோதனைக்கு, பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் இணைந்து, ட்ரூநெட் எந்திரங்களை ஈடுபடுத்தும் பணியை மேற்கொண்டுள்ளன.
ஆர்டி-பிசிஆர் உபகரணங்கள், விடிஎம், துடைப்பான்கள், ஆர்என்ஏ பிரித்தெடுக்கும் உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களது உற்பத்திக்கு கடந்த சில மாதங்களாக ஊக்குவிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் குணமடையும் விகிதம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. தற்போது அது 41.61 சதவீதமாக உள்ளது. மொத்தம் 60,490 நோயாளிகள் இதுவரை கொவிட் -19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. 3.30 சதவீதமாக ( ஏப்ரல் 15-ஆம் தேதி நிலவரம்) இருந்த இறப்பு விகிதம் தற்போது 2.87 சதவீதமாக உள்ளது. உலகிலேயே இதுதான் மிகவும் குறைவான விகிதம் ஆகும். உலக இறப்பு விகித சராசரி தற்போது 6.45 சதவீதமாக உள்ளது.
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கான இறப்பு விகித ஆய்வின்படி, இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு இது 0.3 சதவீதமாக உள்ளது. உலகப் புள்ளிவிவரம் லட்சம் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதம் 4.4 சதவீதம் எனக் கூறுகிறது. லட்சம் மக்கள் தொகைக்கான இறப்பு விகிதமும், பாதிக்கப்பட்டோர் இறப்பு விகிதமும் மிகக் குறைவாக இருப்பதற்கு உரிய நேரத்தில் நோய் கண்டறிவது மற்றும் சிகிச்சை மேலாண்மை தான் காரணமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT