Published : 26 May 2020 04:21 PM
Last Updated : 26 May 2020 04:21 PM

உள்நாட்டு விமானப் போக்குவரத்து: ஒரே நாளில் 832 விமானங்கள் இயக்கம்; 58318 பயணிகள் பயணம்

உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கிய மே 25-ம் தேதி ஒரே நாளில் 58318 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குரவத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அது முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

கடந்த 2 மாதங்களுக்குப் பின் 25-ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. எனினும் உள்நாட்டு விமானங்களை இயக்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. பயணிகளை தனிமைப்படுத்தலாமா அல்லது வீட்டில் தனிமைப்படுத்தலாமா போன்ற கேள்விகளால் பெரும் குழப்பம் நிலவியது.

எனினும் 25-ம் தேதி திட்டமிட்டபடி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. பயணிகள் அனைவருக்கும் விமானநிலையத்தில் முறைப்படி அனைத்துப் பரிசோதனைகளும் நடந்தன. பயணிகள் அனைவரும் செல்போனில் ஆரோக்கிய சேது செயலி இருக்கிறதா என அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டனர். சமூக விலகலை கடைபிடித்து நிற்கவும், முகக்கவசம் அணிந்திருக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது

பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தாலும் மே 25-ம் தேதி ஒரே நாளில் 58318 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குரவத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மே 25-ம் தேதி விமானப்போக்குவரத்து தொடங்கிய அன்று ஒரே நாளில் 832 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 58318 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்தும் இன்று விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. பயணிகள் எண்ணி்க்கை தொடர்ந்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x