Last Updated : 26 May, 2020 04:24 PM

 

Published : 26 May 2020 04:24 PM
Last Updated : 26 May 2020 04:24 PM

வரும் நாட்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்; கட்டுப்பாடுகள் தளர்வு, புலம்பெயர்பவர்கள் பயணம் காரணம்: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில், மத்தியஅரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பதாலும், ரயில், விமானப்போக்குவரத்துக்கு அனுமதியளித்திருப்பதாலும், அதன் மூலம் புலம்பெயர்பவகள் பயணத்தால் வரும் நாட்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்

உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பிரேசில், ஜெர்மனி, துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்து 10-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. தொடர்ந்து 5 நாட்களாக மேலாக இந்தியாவில் கரோனா நோயாளிகள் 6 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகின்றனர். கரோனாவில் இந்தியாவில் பாதிப்பு 1.45 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

இன்றுகாலை 9 மணிவரை 31 லட்சத்து 26 ஆயிரத்து 119 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.கடந்த 24 மணிநேரத்தில் 92 ஆயிரத்து 528 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பரிசோதனையை அதிகப்படுத்தும் போது பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன

முதல் இரு கட்ட லாக்டவுனை அமல்படுத்தியதால் 14 முதல் 29 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது, 37ஆயிரம் முதல் 78 ஆயிரம்பேர் உயிரிழப்பு தடுக்கப்பட்டது என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

இ்ந்த சூழலில் 4-வது லாக்டவுனில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும், ரயில், விமானப் போக்குவரத்துக்கு அனுமதித்துள்ளதால், கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பல்வேறு மருத்துவ வல்லுநர்கள்கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா நிருபர்களிடம் கூறுகையில் “தற்போது நாட்டில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதெல்லாம் ஹாட்ஸ்பாட் பகுதியிலிருந்துதான் வருகிறது. மத்திய அரசு கட்டுப்பாடுளை தளர்த்தியிருப்பதாலும், ரயில், விமானப் போக்குவரத்து அதிகரிப்பாலும், புலம்பெயர்வர்கள் இனிவரும் நாட்களில் அதிகமாக பயணிப்பார்கள். இதனால் இனிவரும் நாட்களில் கரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்

கரோனா அறிகுறி இல்லாதவர்கள், அல்லது அறிகுறி ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தில் இருப்பவர்கள் தீவிரமான பரிசோதனை மூலம் பயணிக்கும் போது, அவர்கள் செல்லும் இடத்தில் குறைவான பாதிப்பை அடையக்கூடும். தீவிரமான கண்காணி்ப்பு, புலம்பெயர்கள் வரும்பகுதிகளில் கண்காணி்ப்பை அதிகப்படுத்தி நோய்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.

சமூக விலகல் முறையாகக் கடைபிடிக்காமல்,வெளியே செல்லும்போது கை சுத்தத்தை பராமரிக்காவிட்டால், கரோனா வைரஸ் பரவல் மிக வேகமாக இருக்கும். தற்போது முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிகமாக பரிசோதனை செய்யப்பட்டு வருவதால், அதன் மூலம் பாதிப்பு அதிகமாகி வருகிறது” எனத் தெரிவித்தார்

இந்திய பொதுசுகாதார கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சந்திரகாந்த் எஸ் பாண்டவ் கூறுகையில் “ கரோனாவை கட்டு்ப்படுத்திய கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. கரோனா வைரஸ் காட்டுத்தீபோல் பரவுவதற்கு இந்த சூழல்மிகவும் உகந்ததாக அமையும். வரும் நாட்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்.

லாக்டவுனை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது ஆனால், திட்டமிட்டு லாக்டவுனை தளர்த்த வேண்டும். பயணங்கள் அதிகரிக்க அதிகரிக்க கரோனா பரவல் அதிகரிக்கும். பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிரமான கண்காணிப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும” எனத் தெரிவித்தார்

ஆசிய மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் கே.கே. அகர்வால் கூறுகையி்ல் “ முறையான சமூக விலகலைக் கடைபிடிக்காமல் புலம்பெயர்வர்கள் பயணித்தால், வரும் நாட்களில் கரோனா பரவும் வேகம் அதிகரிக்கும். அடுத்த 10 நாட்களில் 2 லட்சத்தை இந்தியா கடந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

3-வது லாக்டவுன் வரை எண்ணிக்கை கட்டுக்குள் இருந்து 4-வது லாக்டவுன் தொடங்கியது முதல் அதிகரித்து வருவதற்கு காரணம் மக்கள் முறையாக சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை .மே மாதத்தின் கடைசி வாரம் வெயில் அதிகமாக இருக்கும்.மனிதர்கள் மூலம் மனிதர்கள் பரவுவதைக் காட்டிலும், தரைத்தளத்திலிருந்து மனிதர்களுக்கு பரவுவது குறைந்திருக்க வேண்டும். ஆனால், கரோனா பாதிப்பு குறையவில்லை” எனத் தெரிவி்த்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x