Last Updated : 26 May, 2020 08:31 AM

 

Published : 26 May 2020 08:31 AM
Last Updated : 26 May 2020 08:31 AM

2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு: முதலாம் ஆண்டு விழாவுக்கு ஆயிரம் ஆன்-லைன் மாநாடுகள் நடத்த பாஜக திட்டம்

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, பதவிஏற்று முதலாம் ஆண்டு விழா வருவதையொட்டி, ஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து வரும் 30-ம் ேததியோடு ஓர் ஆண்டு நிறைவடைகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலாம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.

ஆனால், தற்போது கரோனா வைரஸ் பாதிப்புஅதிகரித்து வருவதால் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்-லைன் மூலம் அனைத்தையும் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது

இதுதொடர்பாக பாஜகவின் பொதுச்செயலாளர் அருண் சிங் அனைத்து மாநிலங்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் “ மாநிலங்களில் மிகப்பெரிய அமைப்பைக் கொண்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் பாஜக அரசு 2-வது முறையாகப் பதவி ஏற்ற முதலாம் ஆண்டுவிழாவில் குறைந்தபட்சம் இரு விர்சுவல் ரேலி(மெய்நிகர் பேரணி) நடத்த வேண்டும், சிறிய அமைப்புகள் ஒரு பேரணி நடத்த வேண்டும், இதில்750 –க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும். இணையதளம் வாயிலாக ஆயிரம் மாநாடுகள் நடத்த வேண்டும்.

இந்த ஆண்டு முழுவதும் மோடி அரசு செய்த வரலாற்று சாதனைகளை எடுத்துக்கூறுவதாக இருக்கவேண்டும். ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்தது, முத்தலாக்கை ரத்து செய்தது, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வழிவகுத்தது போன்ற வரலாற்று சாதனைகளை மக்களுக்கு கூறும் வகையில் செயல்பட வேண்டும். இந்த அனைத்து சாதனைகளும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத்தப்படவேண்டியவை

உலகளவில் மிகவும் புகழ்வாய்ந்த, அனைவரும் அறியப்படும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். 2-வது முறையாக பிரதமர் மோடி அரசு பதவி ஏற்று மக்களின் நீண்டகால ஆசைகளை நிறைவேற்றியுள்ளார்.”எனத் தெரிவித்துள்ளார்

வரும் 30-ம் தேதி நிகழ்ச்சிகள் தொடங்கி அடுத்த ஒரு மாதத்துக்கு தொடர்ந்து நடைபெறும் என்று பாஜக தலைமை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஃபேஸ்புக் வழியாக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உரையாற்ற உள்ளார்.

பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வாட்ஸ் அப் வழியாக பிரதமர் மோடி அரசு செய்த சாதனைகளை மக்களுக்கு வாட்ஸ்அப் வழியாக பரப்ப வேண்டும், கரோனா காலத்தில் பாஜகவினர் செய்த தொண்டு பணிகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என பாஜக தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமர் மோடி 2.0 அரசின் முதலாண்டு ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 150-க்கும் மேற்பட்ட ஊடகசந்திப்புகளை நடத்தி சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தவும் தொண்டர்களுக்கு பாஜக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. கரோனா காலத்தில் சமூக விலகலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தல், கரோனாவில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டம் ஆகியவை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பாஜக கேட்டுக்கொண்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x