Published : 26 May 2020 07:36 AM
Last Updated : 26 May 2020 07:36 AM

தெலங்கானாவில் தொழிலாளர்கள் மரண வழக்கில் ஒருவர் கைது- ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை; தூக்க மாத்திரை கொடுத்து கிணற்றில் தள்ளியது அம்பலம்

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம் கொர்ர குண்டா பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக வாரங்கல் நகர போலீஸ் ஆணையர் தாமோதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், பிஹாரைச் சேர்ந்த சஞ்சய் குமாரை கைது செய்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு கொலையை மறைக்க 9 பேரைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

பிஹாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் (24), மேற்கு வங்க மாநிலத்தின் மக்சூத் ஆகியோர் வாரங்கலில் உள்ள சணல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். அப்போது மக்சூத் மனைவி நிஷாவின் சகோதரி மகள் ரஃபிகாவுடன் (31), சஞ்சய் குமார் நெருங்கி பழகி வந்தார். ரஃபிகா கணவரை பிரிந்தவர். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மூத்த மகளிடம் சஞ்சய் குமார் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனை அறிந்த ரஃபிகா, சஞ்சய் குமாரை கண்டித்துள்ளார். இதனால் சஞ்சய் குமார், ரஃபிகாவை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கடந்த 6-ம் தேதி மேற்கு வங்கம் சென்ற சிறப்பு ரயிலில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு மோர் பாக்கெட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

மீண்டும் ஊருக்கு திரும்பிய சஞ்சய் குமாரிடம் ரஃபிகா எங்கே என நிஷா கேட்டுள்ளார். அவர் ஊருக்கு சென்றுள்ளதாகவும் திரும்பி வருவார் எனவும் மழுப்பலாக கூறியுள்ளார் சஞ்சய். இதனை தொடர்ந்து ரஃபிகா குறித்து அடிக்கடி கேட்க தொடங்கியதால் மக்சூத் குடும்பத்தினரை கொலை செய்ய முடிவு செய்தார்.

கடந்த 20-ம் தேதி மக்சூத் மகன் ஷாபத்தின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட சஞ்சய், அங்குசமைத்து வைத்திருந்த உணவில்தூக்க மாத்திரைகளை கலந்துள்ளார். வீட்டின் மாடியில் தங்கியிருந்த பிஹார் இளைஞர்கள் இருவரின் உணவிலும் மாத்திரையை கலந்து உள்ளார். தூக்க மாத்திரைகலந்த உணவை சாப்பிட்ட அனைவரும் சீக்கிரமாகவே உறங்கியுள்ளனர். தூக்கத்திலேயே மயக்கமடைந்த இவர்களை கோணிப்பையில் அடைத்து வீட்டின் அருகில்உள்ள கிணற்றில் தள்ளி விட்டுள்ளார். இதில் அனைவரும் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x