Published : 25 May 2020 08:44 PM
Last Updated : 25 May 2020 08:44 PM

அடுத்த 10 நாட்களில் 36 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 2600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி

அடுத்த பத்து நாட்களில் 36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காக,மேலும் 2600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா ஊடரங்கிற்கு பிறகு இதுவரை 3000 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு ஏற்றிச்செல்லப்பட்டிருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

அடுத்த பத்து நாட்களில் 36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காக,மேலும் 2600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், பீஹார் உட்பட 18 மாநிலங்களிலிருந்து புறப்படும். தமிழ்நாட்டிற்கான சேவை தவிர, இந்த ரயில்கள் அசாம், பீஹார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, கர்நாடகா ஆகிய 15 மாநிலங்களுக்கும் செல்லும்

நேற்று இரவு 1652 பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டிலிருந்து கோரக்பூருக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பயணிகள் அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை நடத்தப்பட்டது என்றும், பாதுகாப்பான விலகியிருத்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட்டதாகவும் ரயில்வே தெரிவித்தது. மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 1599 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு, திருநெல்வேலியில் இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒன்று ஒடிசாவில் உள்ள ஹரிபடாவிற்கு புறப்பட்டுச் சென்றது.

பிஹாரில் உள்ள மதுபானி, உத்தரப்பிரதேசத்திலுள்ள டியோரியா சதர், அசாமில் உள்ள திப்ரூகர் ஆகிய இடங்களுக்கு கோயம்புத்தூரிலிருந்தும், சென்னையிலிருந்தும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர்கள் 1467 பேரை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டிலிருந்து ஒடிசாவில் உள்ள பத்ரக்கிற்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது.

சனிக்கிழமையன்று புலம்பெயர் தொழிலாளர்கள் 308 பேரை ஏற்றிக்கொண்டு திருச்சிராப்பள்ளியிலிருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில் டில்லி புறப்பட்டு சென்றது. தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய இடங்களைச் சேர்ந்த இந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை உட்பட 19 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் சிறப்புப் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் ரயில்களில் ஏறும் வரை விலகி இருத்தல் விதிமுறை பின்பற்றப்படுகின்றனவா என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு சிவராசு ஆய்வு செய்தார்.

வெள்ளிக்கிழமையன்று 773 புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரியிலிருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒன்று ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றது. இந்தத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி,திருச்சிராப்பள்ளி, மதுரை, அரியலூர் கடலூர் ஆகிய பதிமூன்று மாவட்டங்களில் பணியாற்றி வந்தனர்.

இவர்களில் 23 பேர் காரைக்காலில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகத்தால் உணவு பொட்டலங்களும், குடிநீரும் வழங்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் 360 புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு திருச்சிராப்பள்ளியிலிருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒன்று ஜார்க்கண்டுக்கு இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளி அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு திருச்சிராப்பள்ளி வந்தடைந்தது. இவர்களில் 43 பேர் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சேதுபதி அரசு ஐடிஐ மையத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தத்தமது சொந்த மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக வந்த அனைவருக்கும், திருச்சி மாவட்ட நிர்வாகம் காலை சிற்றுண்டியும், குடிநீரும் வழங்கியது.

பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களின் கண்ணீரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் துடைத்து விட்டன. நம்முடைய தொழிலாளர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகக்கூடாது; அவர்கள் வசதியாகப் பயணிக்கவேண்டும்; பாதுகாப்பாக தங்கள் ஊர்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதை இந்திய ரயில்வே உறுதி செய்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்து கொள்கிறார்கள். அவர்களை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில், குடும்பத்தினரின் அன்பை விட வேறு எந்த பெரிய நிம்மதியும் கிடைத்து விட முடியாது. உணர்வுப்பூர்வமான இந்த “இல்லம் திரும்புவோம்” பயணத்தை மேற்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மனதில் பதியும் வண்ணம் பல ஆயிரக்கணக்கான ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி ரயில்வே உதவி செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x