3 மாதங்களுக்குப் பின் தாயைக் காண தனியாக விமானத்தில் வந்த 5 வயதுச் சிறுவன்

பெங்களூரு விமான நிலையத்தில் தனது தாய்க்காக காத்திருந்த சிறுவன் சர்மா : படம் | ஏஎன்ஐ.
பெங்களூரு விமான நிலையத்தில் தனது தாய்க்காக காத்திருந்த சிறுவன் சர்மா : படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் தொடங்கும் முன் டெல்லி சென்ற 5 வயதுச் சிறுவன், 3 மாதங்களுக்குப் பின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்று தொடங்கியுடன் தனியாக பெங்களூருக்கு வந்தார்.

அந்த 5 வயதுச் சிறுவனை வரவேற்க அவரின் தாய் விமான நிலையத்தில் காத்திருந்தார். 3 மாதங்களுக்குப் பின் தனது மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆரத்தழுவி முத்தமிட்டு அழைத்துச் சென்றார்.

பெங்களூரூவைச் சேர்ந்த விஹான் சர்மா எனும் 5 வயதான சிறுவன லாக்டவுன் தொடங்கும் முன் டெல்லியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றார். ஆனால், லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடந்த 3 மாதங்களாக பெங்களூரூவுக்கு வரமுடியாமலும், தனது தாயைப் பார்க்க முடியாமலும் தவித்தார். இதனால் கடந்த 3 மாதங்களாக டெல்லியில் உள்ள தனது தாத்தா பாட்டியுடன் சிறுவன் சர்மா தங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதையடுத்து, சிறப்புப் பிரிவு அடிப்படையில் விஹான் சர்மாவின் தாத்தா, பாட்டி அவரை டெல்லியிலிருந்து பெங்களூருக்கு தனியாக விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

தனது தாயுவடன் புறப்பட்ட சிறுவன் சர்மா
தனது தாயுவடன் புறப்பட்ட சிறுவன் சர்மா

வீட்டை விட்டு பக்கத்து கடைக்கோ அல்லது தெருவுக்கோ விளையாடச் சென்றால் வழிதெரியாமல் குழந்தைகள் திகைக்கும் போது, சிறுவன் விஹான் சர்மா டெல்லியிலிருந்து பெங்களூருக்குப் பாதுகாப்பாக இன்று காலை வந்து சேர்ந்தார்.

முகத்தில் முகக்கவசம், கையில் கையுறை அணிந்து, ஸ்பெஷல் கேட்டகரி என்ற அட்டையைச் சுமந்து, சிறிய சூட்கேஸ் பிடித்து சர்மா வெளியே வந்தார். சிறப்புப் பிரிவில் பயணித்தார். இந்தத் தகவல் அறிந்த பெங்களூரு கெம்பகவுடா விமான நிலைய நிர்வாகம் தனது ட்விட்டர் தளத்தில், “விஹான் சர்மாவை வரவேற்கிறோம். அனைத்துப் பயணிகளையும் பாதுகாக்க பெங்களூரு விமான நிலையம் தொடர்ந்து பணியாற்றும்” என ட்விட்டரில் தெரிவித்தது.

சர்மா தான் கையில் வைத்திருந்த செல்போன் மூலம் தனது தாய் மஞ்சேஷ் சர்மாவைத் தொடர்பு கொண்டவுடன் அருகே இருந்த அவர் தனது மகன் சர்மாவைத் தேடி வந்தார். தனது மகனை 3 மாதங்களுக்குப் பின் சந்தித்ததும் பாசத்தால் கட்டித்தழுவினார்.

இது தொடர்பாக மஞ்சேஷ் சர்மா ஊடகங்களிடம் கூறுகையில், “என்னுடைய மகன் சர்மா கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லிக்கு அவனின் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் சென்றார். ஆனால், லாக்டவுன் காரணமாக மீண்டும் பெங்களூரூவுக்கு வரமுடியவில்லை. உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்று தொடங்கியவுடன் சிறப்புப் பிரிவில் தனியாக டெல்லியிலிருந்து பெங்களூருக்குப் பயணித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in