

திருவனந்தபுரம் கீழ்கோர்ட்டில் மதுபான வழக்கு தொடர்பாக ஆஜர்ப் படுத்தப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கரோனா பாசிட்டிவு உறுதியாக விசாரித்த மேஜிஸ்ட்ரேட், போலீஸார் உட்பபட 100 பேர் பீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக மதுபானங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர், இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார், இதனையடுத்து பூஜாப்புரா மத்திய சிறைச்சாலையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.
இதில் ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியாக, இவரை கோவிட்-19 சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இவர் ஆஜரான நெடுமாங்காட் மேஜிஸ்ட்ரேட், 34 போலீஸார், ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர், அரசு மருத்துவமனை ஊழியர்கள் சிலர், பூஜாப்புரா மத்திய சிறைச்சாலியின் 12 அதிகாரிகள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மலையாளப் பட நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் வாமனபுரம் எம்.எல்.ஏ... டி.கே முரளி (சிபிஐ கட்சி) ஆகியோர் தனிமைப்படுத்திக் கொண்டனர், காரணம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இவர்களும் பங்கேற்றனர் என்பதாலேயே.
2 நாட்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக மதுபானங்களைக் கடத்திய கார் ஒன்று போலீஸார் மீது இடித்து விட்டு வேகமாகப் பறந்தது. இவர்கள் விரட்டிப் பிடிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டனர், 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போதையில் இருந்தனர் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.