Last Updated : 24 May, 2020 12:30 PM

 

Published : 24 May 2020 12:30 PM
Last Updated : 24 May 2020 12:30 PM

இந்தியாவில் மொத்தம் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள்; 75 லட்சம் பேர் சொந்த மாநிலம் திரும்பினர்: உள்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். லாக்டவுன் தொடங்கியதிலிருந்து அதில் 75 லட்சம் பேர் சொந்த மாநிலத்துக்கு ரயில்கள் மூலம் சென்றுவிட்டனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் புன்யா சலைலா ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம் பேர் சொந்த மாநிலத்துக்கு மே 1-ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் இருந்து சென்றுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஷ்ராமிக் ரயில்கள் மூலம் இதுவரை 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றுள்ளனர். பேருந்துகள் மூலம் 40 லட்சம் பேர் சென்றுள்ளனர்.

இணைச் செயலர் புன்யா சலைலா ஸ்ரீவஸ்தவா

கடந்த மார்ச் 27-ம் தேதி மாநிலங்களுக்கு அறிவுறுத்தியதில், புலம்பெயர் தொழிலாளர்களை மிகவும் கனிவுடன் அணுகவேண்டும். அவர்களை லாக்டவுன் காலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மாநிலங்களுக்காக பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.11,092 கோடியை மத்திய அரசு விடுவித்தது. புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் களைவத்காக 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையையும் மத்திய அரசு தொடங்கி, அதை இணைச்செயலாளர் அளவிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் புரியும் வகையிலும், அறியுமாறு அவர்களுக்காக மாநில அரசும், மத்திய அரசும் செய்துள்ள வசதிகள், உதவிகள் குறித்து மாநில அரசுகள் விளம்பரம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களை லாரி, டிரக் போன்றவற்றில் அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களுக்குள் ரயில்கள் மூலம் செல்லலாம் என்றும், மே 1-ம் தேதி முதல் மாநிலம் வி்ட்டு மாநிலத்துக்கு ரயில்கள் மூலம் செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டது''.

இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x