Published : 24 May 2020 08:38 AM
Last Updated : 24 May 2020 08:38 AM

கேரளாவில் ஒரே நாளில் 62 பேருக்கு வைரஸ் தொற்று

திருவனந்தபுரம்

கேரளாவில் கரோனா வைரஸ்தொற்று திடீரென அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 7 சுகாதார ஊழியர்கள் உட்பட 62 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதில் கேரளா முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலும் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் திரும்பி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து விமானம்மூலம் 7,303 பேரும் கப்பல் மூலம் 1,621 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக 76,608 பேரும் ரயில் மூலம் 3,108 பேரும் கேரளாவுக்கு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 88,640 பேர் கேரளாவுக்கு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 17-ம் தேதி 14 பேர், 18-ம் தேதி29 பேர், 19-ம் தேதி 12 பேர், 20-ம் தேதி 24 பேர், 21-ம் தேதி 24 பேர், 22-ம் தேதி 42 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 62 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு திரும்பியவர்கள். மாநிலத்துக்குள் 7 சுகாதாரஊழியர்கள் உட்பட 13 பேருக்குதொற்று ஏற்பட்டிருக்கிறது.

கேரளாவில் இதுவரை 794 பேர்வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 515 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். 275 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளின் பட்டியலில் 9 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x