Published : 24 May 2020 06:50 AM
Last Updated : 24 May 2020 06:50 AM

கரோனா வைரஸ் தொற்று நிலவரம்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்று நிலவரம் பற்றி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடிநேற்று ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், அதிபர்கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு இலங்கையில் கரோனாவைரஸ் தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் திறம்பட செயல்படுவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்றுநோயையும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பையும் எதிர்கொண்டு சமாளிப்பதற்கு அண்டை நாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு நல்கும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வெளியுறவுஅமைச்சகம் தரப்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தனதுஅரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி மோடியிடம் கோத்தபயராஜபக்ச விவரித்தார். இந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களை முடுக்கிவிடுவது அவசியம் என்பதை இந்த ஆலோசனையின்போது இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவைச் சேர்ந்த தனியார் துறையினர் இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றியும் இருவரும் விவாதித்தனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொரீஷியஸ் பிரதமருடனான ஆலோசனை பற்றி ட்விட்டரில் பதிவிட்ட மோடி. ‘‘இனிதான இன்றைய உரையாடலுக்காக பிரதமர் பிகே ஜக்நாத்துக்கு நன்றி. கரோனா வைரஸ் தொற்று பிரச்சினையை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். இந்த இக்கட்டான தருணத்தில் மொரீஷியஸ் நாட்டு சகோதரர்கள், சகோதரிகளுக்கு இந்தியர்கள் தொடர்ந்து துணையாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x