

மேற்குவங்கத்தில் உம்பன் புயல் பாதித்த பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்கக்கோரி போரட்டம் நடத்தியவர்கள் வாகனத்திற்கு தீ வைத்தனர்.
வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம், வங்கதேசக் கடல் பகுதி வழியாகக் கரையைக் கடந்தது.
உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தை மறுகட்டமைப்பு செய்யும் அளவு புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹராவிலும் புயலால் சேதங்கள் ஏற்பட்டாலும் இரு மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான்.
நார்த் 24 பர்கானாவில் 17 பேர், கொல்கத்தவில் 15 பேர், பசிராத்தில் 10 பேர், புயல் கரையைக் கடந்த சுந்தரவனக்காடுகள் அடங்கிய தெற்கு பர்கானாவில் 4 பேர் என மொத்தம் 80 பேர் புயலுக்குப் பலியாகியுள்ளனர் என மேற்கு வங்க அரசு தெரிவிக்கிறது.
லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தில் திடாகர் என்ற பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்கக்கோரி மக்கள்போரட்டம் நடத்தினர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கூறி லேசான தடியடி நடத்தினர்.
அப்போது திடீரென அவர்களில் ஒரு பிரிவினர் வாகனத்திற்கு தீ வைத்தனர். வாகனம் கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தடியடி நடத்தி போலீஸார் விரட்டியடித்தனர்.